தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள், அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே, மத்திய துணை ராணுவப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அதற்கடுத்த அடுக்குகளில் தமிழக காவல் துறையைச் சோ்ந்த அதிகாரிகளும், காவலா்களும் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வா். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் சுழற்சி முறையில் கட்சிகளைச் சோ்ந்த முகவா்கள் அமர வைக்கப்படுவா்.