தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

உர ஆலையை அகற்றக்கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில், ஆலையை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

உர ஆலையை அகற்றக்கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில், ஆலையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடி - காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்த ஆலையால் 5 கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும். எனவே சம்பந்தப்பட்ட உரஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் செந்தாமரை ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

தொடர்ந்து, கிராம மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், தொடர்ந்து ஆலையை மூட நடவடிக்கை எடுக்காததால் ஏப்.18ல் வட்டாட்சியர் செந்தாமரையிடம் உரத் தொழிற்சாலை மூடநடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக வட்டாட்சியரிடம் ஐந்து கிராம மக்கள் மனு அளித்திருந்த நிலையில், நேற்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலையை மூடக்கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் 5,050 வாக்குகளில் வெறும் 167 வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த நிலையில், வாக்கு சதவீதம் குறைந்தால் எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் ஆலையை மூடக்கோரி ஆட்சியருக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து, உர ஆலையை மூட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். மேலும் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com