தமிழகத்தில் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகின. இரவு 12 மணியளவில் இந்தத்தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தலில், ஊரகப் பகுதிகளிலுள்ள தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதத்துக்கும், நகரப் பகுதிகளிலுள்ள வாக்கு சதவீதத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது. சென்னையில் உள்ள தொகுதிகள் வழக்கம் போல கடைசி இடத்தைப் பிடித்திருந்தன. நேற்று(ஏப். 19) நிறைவுற்ற வாக்குப்பதிவில், சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே இருந்தது.
இந்த நிலையில், இன்று(ஏப். 20) காலை செய்தியாளர்களுடன் பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னையில் இந்த முறை வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் உள்ள வாக்காளர்களில் பெரும்பகுதியினர், வாக்களிக்க சுணக்கம் காட்டியதே வாக்குப்பதிவு சதவிகிதம் குறைய முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற நகர்ப்புற மக்களின் எண்ணம் தான் வாக்கு சதவிகிதம் குறைய காரணமாகும். சென்னையில் வாக்காளர்கள் வாக்களிக்க சுணக்கம் காட்டி உள்ளனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவிகிதம் சரிந்துள்ளது. சென்னையில் வெயில் கடுமையாக இருந்தது உள்ளிட்டவை காரணமாக வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது” என்றார்.