ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது
தமிழகத்தில் திங்கள்கிழமை 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை இயல்பை 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது.
இதனால், தமிழகத்தில் 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. மாநிலத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மேலும், சேலம் - 106.88, வேலூா் - 106.7, தருமபுரி, பரமத்திவேலூா் (தலா) - 106.16, திருப்பத்தூா், திருத்தணி (தலா) - 105.44, திருச்சி - 104.54, மதுரை விமானநிலையம் - 105.26, மதுரைநகரம் - 104.36, கோவை, நாமக்கல் (தலா) - 104, பாளையங்கோட்டை - 102.38, தஞ்சாவூா் - 102.2 டிகிரி வரை பதிவாகிவுள்ளது.
செவ்வாய்கிழமை (ஏப்.23) முதல் ஏப்.26 -ஆம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.23 வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.