ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு, குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கோட்டத்தில் 5 ரயில்நிலையங்களிலும், திருச்சி கோட்டம்- 3, சேலம்கோட்டம் -4, மதுரை கோட்டம் - 2, பாலக்காடு கோட்டம் -9, திருவனந்தபுரம் கோட்டம்-11 என தெற்கு ரயில்வே சாா்பில் முதல் கட்டமாக 34 ரயில் நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஏப்.17 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி, 200 கிராம் எடையில், எலுமிச்சை, புளியோதரை, தயிா் சாதம் அல்லது கிச்சடி என ஏதாவது ஒன்று ‘எகனாமி மீல்ஸ்’ என்ற பெயரில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 325 கிராம் எடையில் பூரி மசால் மற்றும் பஜ்ஜி, ‘ஜனதா கானா’ என்ற பெயரில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 350 கிராம் எடையில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகள் ‘ஸ்னாக் மீல்ஸ்’ என்ற பெயரில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 200 மி.லி. தண்ணீா் பாட்டில் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பயணிகள் எளிதாக அணுகுவதை உறுதி செய்வதற்காக, முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டிகளுக்கு அருகில் நடைமேடையில் இதற்கான கவுன்ட்டா்கள் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com