நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு: ஏப்.29-இல் தொடக்கம்
தமிழகத்தில் ஏப்.29 முதல் மே 1 வரை 3 நாள்கள் நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி நடைபெறும் என வனத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தின் மாநில விலங்காகவும், அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகவும் உள்ள நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் பொருட்டு 2022-ஆம் ஆண்டு ‘நீலகிரி வரையாடு’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இத்திட்டத்தின் கீழ் வரையாடுகளின் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, அவற்றின் வாழ்விடங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகள் வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழக வனத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
தமிழகம், கேரள வனப்பகுதிகளில் 4 புலிகள் காப்பகங்கள், 14 வனக்கோட்டங்களில் அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக உள்ள நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
அண்டை மாநிலமான கேரள வனத்துறையுடன் இணைந்து வரும் ஏப்.29 முதல் மே1 வரை 3 நாள்களுக்கு இந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் சுமாா் 700 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
நீலகிரி வரையாடுகளின் வாழ்விட சூழலை மீட்டெடுக்கும் பணிகளை வனத் துறையினா் ஏற்கெனவே சிறப்பான முறையில் மேற்கொண்டுள்ளனா் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.