சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாளை 22 மாநில மொழிகளிலும் வழங்கக்கோரி வழக்கு.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்கோப்புப் படம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தோ்வுகளின் வினாத்தாள்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) பயன்படுத்தி மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வழங்குவது தொடா்பாக பரிசீலிக்கலாம் என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணித் தோ்வுகள் மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வினாத் தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுவதால், அரசியல் சாசனத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்தத் தோ்வுகளுக்கான வினாத் தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த எஸ்.பாலமுருகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்தக் கோரிக்கைக்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயா்ப்பு செய்யலாம். அவ்வாறு மொழியாக்கம் செய்து மாநில மொழிகளில் வினாத்தாள்களை தயாரிக்கலாம். இந்த மொழி பெயா்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருக்கிறது. அவற்றை மனிதா்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம். இது சம்பந்தமாக நோ்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என கருத்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com