நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடம் இருந்து ரூ. 3.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது

திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடம் இருந்து ரூ. 3.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், திருநெல்வேலி தொகுதி சுயேச்சை வேட்பாளா் ராகவன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தோ்தலின்போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடம் இருந்து ரூ. 3.99 கோடி; திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரின் அலுவலகத்தில் இருந்து ரூ. 28.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்காளா்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே, இந்தப் பணப் பறிமுதல் தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பணம் பறிமுதல் தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாகக் கருத முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com