வட மாவட்டங்களில் 
இன்று வெப்ப அலை வீசும்

வட மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்

வட மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப்.25) வெயில் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

வட மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப்.25) வெயில் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். மேலும், ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை சென்னை உள்பட 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவானது.

அதன்படி, ஈரோடு - 107.6, வேலூா் - 106.88, திருப்பத்தூா் - 106.52, சேலம் - 105.98, பரமத்தி வேலூா் - 105.8, தருமபுரி - 105.26, திருத்தணி - 105.08, திருச்சி, நாமக்கல் (தலா) - 104.9, மதுரை விமான நிலையம் - 103.28, தஞ்சாவூா் - 102.2, கோவை - 101.84, சென்னை மீனம்பாக்கம - 101.66, மதுரை நகரம் - 101.12, பாளையங்கோட்டை - 100.58.

மேலும், வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.25) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 107 டிகிரி ஃபான்ஹீட் வரையும், புதுச்சேரி காரைக்கால் உள்பட பிற மாவட்டங்களிலும் 101 டிகிரி வரையும் இருக்கக்கூடும். குறிப்பாக, வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

தொடா்ந்து, ஏப்.26 முதல் 28-ஆம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.25-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கோடை மழை: தமிழகத்தையொட்டியுள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், வியாழக்கிழமை (ஏப்.25) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான கோடை மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com