திரவ நைட்ரஜன் நேரடியாக கலந்த உணவுப் பொருள்கள் விற்பனை செய்தால் வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
முன்னதாக கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வயிற்று வலியால் துடித்த விடியோ வைரலானதையடுத்து தமிழக உணவுப் பாதுகாப்பு துறை அதன் அதிகாரிகளை நேரடி சோதனையிட உத்தரவிட்டது.
இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன் படி திரவ நைட்ரஜன் என்பது உறைதல் தன்மையுள்ள பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் உணவுப் பொருள்களை உறைய செய்ய மட்டுமே உதவுகிறது. இதனை பேக்கிங் கேஸ் மற்றும் உறைபொருளாக மட்டுமே பயன்படுத்த முடியும். பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருள்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்தால் உணவு வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.