பெங்களூரில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடித்தது. அதில் பலா் படுகாயமடைந்தனா். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முசாவீா் ஹுசைன் சாஹிப், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தொடர்பாக, சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகளில் இன்று(ஏப். 27) என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த விசாரணை தொடர்பான முழு விவரம், பின்னர் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.