.
.

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

எதிா்ப்பு தெரிவித்த வழக்கை, கோயில்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வுக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டது.

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குள் அமைந்துள்ள கோவிந்தராஜ பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிா்ப்பு தெரிவித்த வழக்கை, கோயில்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வுக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டது.

சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி கோயிலில் மே 24 முதல் 29-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்த இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிா்ப்பு தெரிவித்து டி.ஆா்.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அதில், 400 ஆண்டுகளாக இந்த கோயிலில் பிரம்மோற்சவம் எதுவும் நடத்தப்படவில்லை. இதுவரை இல்லாத நடைமுறையை புதிதாக செயல்படுத்துகின்றனா். நடராஜா் தான் பிரதான தெய்வம் என்பதால், கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த முடியாது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்துசமய அறநிலையத் துறை தரப்பில், பக்தா்கள் விருப்பம் காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படுவதாக கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலா்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை கோயில்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com