புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சங்கம்விடுதி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
சங்கம்விடுதி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சிக்குள்பட்ட குருவாண்டான்தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அந்தத் தொட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரில் நடத்தப்பட்ட பகுப்பாய்வுச் சோதனையில், குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய்க்கிருமித் தொற்றுகள் எதுவும் இல்லை என்றும் அறிக்கை பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப். 25ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மேலே ஏறிச் சென்று பார்த்த இளைஞர்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில், அந்தத் தொட்டியில் இருந்து அன்றைய நாளில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரி, திருச்சியிலுள்ள மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் அறிக்கை திங்கள்கிழமை (ஏப். 29) பெறப்பட்டதாகவும், குடிநீர் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய்க் கிருமி எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வெளியிட்ட செயதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியது

பொதுவாக அருந்துவதற்குத் தகுதியான குடிநீரில், ஏதேனும் கலப்பு ஏற்பட்டால் அந்தத் தண்ணீரில் ஈகோலி (ECOLIA) என்ற பாக்டீரியா பல்கிப்பெருகிவிடும். அதுதான் உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.

ஆனால், சங்கம்விடுதி குருவாண்டான்தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரில் அவ்வாறு ஈகோலி என்ற பாக்டீரியாக்கள் எதுவும் உருவாகவில்லை. பரிசோதனை அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com