பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாக துவங்கி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்தப் போட்டி குறைந்தபட்சம் 8 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும், ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்படுவர்.
இதுவரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விளையாட 3677 காளைகளும் 1412 மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். காயமடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக சிறப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
பாலமேடு ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர்கள் விவரம்:
மாடுபிடி வீரர்கள் : 06
மாட்டின் உரிமையாளர்கள் : 04
பார்வையாளர்கள் : 05
காவல்துறை : 01
மேல்சிகிச்சை : 02
போட்டிகளில் பங்கேற்று காளைகளைப் பிடிக்கும் வீரருக்கும், பிடிபடாமல் செல்லும் காளையின் உரிமையாளருக்கும் அண்டா, தங்க நாணயம், மின்விசிறி, கேஸ் ஸ்டவ், சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.