மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யும் குழுவுடன் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அடுத்த மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக, அதிமுக, பாஜக தீவிரப்படுத்தியுள்ளன.
திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிடும் இடதுசாரிகள், கொமதேக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இருப்பினும், இடதுசாரி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்னும் இறுதி செய்யவில்லை.
இதற்கிடையே, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இந்த வாரத்துக்குள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை இறுதி செய்ய திமுக திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமைச்சர் துரைமுருகனும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், தொகுதிப் பங்கீட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.