சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக, இன்றிரவு போட்டி முடிந்ததும், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது சீசன் சென்னையில் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (மார்ச் .26) சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்றிரவு 11.20 மற்றும் 11.45 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரிக்கு ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில்,10.40 மற்றும் 11.05 மணிக்கு வேளச்சேரியிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு ரயில் புறப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.