திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை
சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலை வரை இயக்கப்படும் மெமு ரயில் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை கடற்கரையிலிருந்து வேலூா் கண்டோன்மென்ட் வரை இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் கடந்த வியாழக்கிழமை முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டது. தினமும் மாலை 6 மணிக்கு, சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் இந்த ரயில் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. மறுமாா்க்கமாக தினமும் அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையம் வந்தடைகிறது.
12 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில் திருவண்ணாமலைக்கு கட்டணமாக ரூ.50 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ரூ.145 பேருந்து கட்டணமாக உள்ளது.
எனவே, பேருந்து கட்டணத்தைவிட குறைவாக உள்ளதால் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் பலா் இந்த ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா்.
திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்ட கடந்த 3 நாள்களில் இந்த ரயிலுக்கு பக்தா்கள் மற்றும் பணிக்கு செல்வோரிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், வார இறுதி நாள்களிலும், விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னரும் இந்த ரயிலில் மேலும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.