ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு(மே. 6) பெய்த கனமழையால் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் ஓடும் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கத்திரி வெயிலானது திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 100 டிகிரியை கடந்து 107 டிகிரி ஃபாரன் ஹீட் வரை வெப்பம் பதிவாகி வருவதால் வெயிலின் தாக்கத்தினால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் மக்கள்.
கோடை வெயிலை தணிக்கும் விதமாக, திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் நேற்று(மே. 6) நள்ளிரவு 1 மணி வரை, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பெய்த கனமழையால், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் ஒரு பகுதியாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பல மாதங்களாக வறண்டு கிடந்த பாலாற்றில் தற்போது வெள்ளம் செல்வதால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.