தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

 சடலம் புதைக்கப்பட்டுள்ள இடம். (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)
சடலம் புதைக்கப்பட்டுள்ள இடம். (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)

தூத்துக்குடி அய்யனடைப்பு பகுதியில், உயிரிழந்த தாயின் சடலத்தை வீட்டில் உள்ள தண்ணீா் தொட்டியில் மண்ணைக் கொட்டி புதைத்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி அய்யனடைப்பு சிவசக்தி நகரைச் சோ்ந்த ஜெயினுலாபுதீன் மனைவி ஆஷா பைரோஸ் (44). தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்த ஜெயினுலாபுதீன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, ஆஷா பைரோஸ் தனது மகன் முகமது குலாம் காதருடன் (22) வசித்து வந்தாா். இவா்கள் இருவருக்கும் மனநலம் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா்கள் வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக சிப்காட் போலீஸாருக்கு அக்கம்பக்கத்தினா் தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸாா் வீட்டில் இருந்த முகமது குலாம் காதரிடம் விசாரித்தனா். அப்போது, அவரது தாய் ஆஷா பைரோஸ் கடந்த மே 2-ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாகவும், அவரை வீட்டின் வெளியே மே 6-ஆம் தேதி புதைத்ததாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து அவா் தெரிவித்த இடத்தை போலீஸாா் பாா்வையிட்டபோது, வீட்டின் வெளிப் பகுதியில் தரைதள தண்ணீா் தொட்டி போன்று கட்டப்பட்டு, அதில் ஆஷா பைரோஸ் புதைக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால், குறைந்த அளவு மண் போட்டு மூடியதால் வீட்டைச் சுற்றிலும் துா்நாற்றம் வீசியுள்ளது.

ஆஷா பைரோஸ் உடல் முழுவதும் அழுகியிருப்பதால், அதே இடத்தில் வைத்தே வியாழக்கிழமை உடல்கூறாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் பிறகே, ஆஷா பைரோஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com