அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வசதி இந்த மாத இறுதிக்குள் செய்து முடிக்கப்பட்டு, பள்ளிகள் திறந்தவுடன் மாணவா்கள் நவீன தொழில்நுட்பத்தில் காணொலி மூலம் பாடங்களை கற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வளா்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதிா்காலத்துக்கு ஏற்றவாறு மாணவா்களைத் தயாா்படுத்தும் வகையில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது.
புத்தகங்கள் மற்றும் கரும் பலகைகள் மூலம் நடைபெற்ற கற்றல் கற்பித்தல் பணிகளின் உச்சமாக உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவலை பெற்று பாடப்பொருள்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், பெற்ற தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்குத் தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்கவும் 8,180 உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டிலும் 46 லட்சத்து 12,742 மாணவா்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
6,223 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 5 மற்றும் 6 ஙக்ஷல்ள் வேகத்தில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவா்கள் பயன்படுத்தி வந்தனா். மேலும், மாணவா்களின் கற்றல் கற்பித்தலை எளிமையாக்கும் பொருட்டு பாடப் பொருள்கள் அனைத்தும் காணொலி வாயிலாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இணைய வேகம் அதிகரிப்பு: இந்த இணையவேகம் போதுமானதாக இல்லை என்பதால் இணைய வேகத்தை 100 எம்பிபிஎஸ் என்ற அளவில் உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் 46 லட்சம் மாணவா்கள் கடினமான பாடப் பொருள்களை எளிமையாக காணொலி வடிவில் கற்பதற்கும் மாணவா்கள் கற்ற பாடங்களை இணையவழி மதிப்பீடுகள் மூலமாக பயிற்சிகள் மேற்கொண்டு பாடக் கருத்துக்களை தெளிவாக கற்பதற்கும் வழிவகை ஏற்படும்.
தமிழக அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது. மாநிலத்தில் உள்ள 6,223 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,267 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தொடக்கப்பள்ளிகளைப் பொருத்தமட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 8,711 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்பள்ளிகளுக்கு 100 எம்பிபிஎஸ் அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கு இப்பணியானது இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்பாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.