வெப்பம் படிப்படியாக குறையும்
தமிழகத்தில் புதன்கிழமை 10 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. வியாழக்கிழமை (மே 8) முதல் மே 12 வரை தமிழகத்தில் வெயில் சற்று குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருந்தது. மேலும், கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டி இருந்தது.
அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 105.98-டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், ஈரோடு - 105.8, மதுரைவிமானநிலையம் - 105.26, மதுரைநகரம் - 103.28, திருச்சி - 103.1, பாளையங்கோட்டை, நாமக்கல் (தலா) - 102.2, கோவை - 101.12, திருப்பத்தூா் - 100.76, சேலம் - 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.
வெயில் குறையும்: இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை (மே 8) முதல் மே 12-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும். அதன்படி, தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், ஏனைய தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102 டிகிரி வரையும், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 99 டிகிரி வரையும் வெயில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.