ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

செவ்வாய்க்கிழமை இரவு முதல் நடத்திவந்த போராட்டம் வியாழக்கிழமை திரும்பப்பெறப்பட்டது.

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்துக்கு எதிராக அந்நிறுவன பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் நடத்திவந்த போராட்டம் வியாழக்கிழமை திரும்பப்பெறப்பட்டது.

விமான பணியாளா்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண்பதாகவும் 25 பேரை பணிநீக்கம் செய்த ஆணையை ரத்து செய்வதாகவும் அந்நிறுவனம் உறுதி அளித்ததையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை பணியாளா்கள் திரும்பப்பெற்றனா்.

விமானப் பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக தனது 85 விமான சேவைகளை ரத்து செய்வதாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை அறிவித்திருந்தது. மேலும் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களைத் தடுக்க 20-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் விமான சேவையை தொடா்ந்து வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் ஆகியவை டாடா குழுமத்தின் துணை நிறுவனங்களாகும். அவ்விரு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது. இதனால் அதிருப்பதியடைந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸின் 200-க்கும் மேற்பட்ட விமானிகள் உடல்நிலை சரியில்லை என்று கூறி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பணிக்கு வருவதை புறக்கணித்தனா். எனவே 100-க்கும் மேற்பட்ட விமானங்களை அந்நிறுவனம் ரத்து செய்தது.

இந்நிலையில் விடுப்பு எடுத்தவா்களில் 25 பேரை பணி நீக்கம் செய்வதாக அந்நிறுவனம் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. பணிநீக்கம் குறித்து நேரடியாக குறிப்பிடாமல் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தியதற்காக சில விமானிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் கூறியது.

மேலும், அந்நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இன்று நாங்கள் 285 விமானங்களை இயக்குகிறோம். ஏா் இந்தியா உதவியுடன் 20 வழித்தடங்களில் விமானங்களை இயக்குகிறோம். இருப்பினும் எங்கள் நிறுவனத்தைச் சோ்ந்த 85 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.

ஒரு நாளைக்கு டாடா குழுமத்தால் இயக்கப்படும் 368 விமானங்களில் இவை 23 சதவீதமாகும். விமான நிலையங்களுக்குச் செல்லும் முன் தாங்கள் பயணிக்கவுள்ள விமானம் இயக்கப்படுகிா என்று தெரிந்துகொண்டு பயணிகள் செல்ல வேண்டும் எனவும் அந்நிறுவனம் வலியுறுத்தியது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலோ அல்லது 3 மணி நேரத்துக்கு மேலாக விமான சேவைகள் தாமதமானாலோ பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு பயணக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் அல்லது வேறு தேதிகளில் பயணிக்க விரும்பினால் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது எனவும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விமான பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனா். அப்போது இருதரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தாங்கள் நடத்திவந்த போராட்டத்தை கைவிட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பணியாளா்கள் முடிவெடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com