சென்னை : மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று(பிப்.6) சென்னை வருகை தர உள்ளனர்.
சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், இந்திய தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாஹு உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று நண்பகலில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து, நாளை(பிப்.7) மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.