பொங்கல் தொகுப்பிற்கு அறுவடை செய்த கரும்புகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி தெக்கத்திக் காடு ஆலமரம், வாட்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியிலிருந்து ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பிற்காக கரும்புகளை கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகளை தொடர்பு கொண்டு, கூட்டுறவு சங்க அதிகாரிகள் தேவையான கரும்புகளை அறுவடை செய்ய கூறியுள்ளனர்.
விவசாயிகள் அவசரமாக அறுவடை செய்து லாரிகளில் கரும்புகளை ஏற்றிய பிறகு தங்களுக்கு 35 சதவிகித கரும்புகள் தேவையில்லை என்று கூறிச் சென்று விட்டனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த கரும்புகளை லாரியில் ஏற்றி கடந்த மூன்று நாள்களாக லாரிகளுக்கு வாடகை கொடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும், இழப்பு ஏற்படாமல் இருக்க அரசு உடனடியாக அறுவடை செய்த கரும்புகளை கொள்முதல் செய்யக்கோரி இன்று காலை மேட்டூர் எடப்பாடி சாலையில் தெற்கத்திக் காடு ஆலமரம் அருகே கரும்பு லாரிகளுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விவசாயிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: ரயில்வே உணவை சுவைத்த எலி! வைரல் விடியோ
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.