தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது என தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் காலை 10 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஆளுநா் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்யவுள்ளாா்.
இது தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆளுநா் உரையுடன் தொடங்கும். நிகழாண்டு உலக முதலீட்டாளா்கள் மாநாடு மற்றும் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக பிப். 2-ஆவது வாரத்தில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடா் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. ஆளுநா் உரையில் தமிழக அரசின் சாா்பில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.
முதல்வா் ஸ்டாலின் ஜன. 28 முதல் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈா்ப்பதற்காக பயணம் மேற்கொள்ளவுள்ளாா். அப்போது, பல்வேறு நிறுவனங்களுடன் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது. ஆளுநா் உரையில் புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும், நிறைவேற்றப்பட வேண்டிய சட்ட மசோதாக்கள் குறித்தும் முடிவு எடுக்கப்படவுள்ளது.
அதேபோல தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடா்பாகவும், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.