தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என பாஜகவை சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று (ஜன. 24) காலை தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கின் முதல் நாளில் ‘மக்களின் வாக்குகளை வெல்பவர்கள் யார்’ என்ற தலைப்பில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கெளரவ் வல்லாப், திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கான் ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர்.
இதில் பேசிய நடிகை குஷ்பு, ''தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் பாஜக பின்தங்கியுள்ளது. ராமர் கோயில் திறப்பு அரசியல் நிகழ்வு அல்ல. தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் பாஜக பின்தங்கியுள்ளது. ஆனால் இன்னும் 6 - 7 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், 6 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நாம் சென்றுகொண்டுள்ளோம். தேசிய மகளிர் ஆணையத்திற்கு வரும் அதிக அளவிலான புகார்கள் பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலிருந்து வருகின்றன'' என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசிய திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை,
''ராமர் கோயில் திறப்பால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தமிழர்கள் புத்திசாலிகள். அரசியல் - ஆன்மிகம் வேறுபாட்டை தமிழர்கள் அறிவார்கள். வேலைவாய்ப்பின்மை நாட்டில் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை ரூ.62 ஆக இருந்தது. ஆனால் தற்போது 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. 40 ரூபாய் உயர்ந்தது எப்படி?'' எனக் கேள்வி எழுப்பினார்.