கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கூடலூர் -உதகை பிரதான சாலையில் அமைந்துள்ளது ஊசிமலைக் காட்சி முனை. நீலகிரிக்கும் வரும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் உதகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் முதலில் வனப் பகுதிக்குள் அமைந்துள்ள ஊசிமலைக் காட்சிமுனை சென்று ரசித்துவிட்டு செல்வது வழக்கமாக உள்ளது.
ஊசிமலைக் காட்சிமுனையில் நின்று பார்க்கும்போது ஆகாசத்திலிருந்து கூடலூர் நகரைப் பார்ப்பதுபோல ரம்மியமாக இருக்கும். மலை உச்சியிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் வனப் பகுதி, கூடலூர் கோட்டத்தின் சிங்காரா மற்றும் இதர பகுதிகளைப் பார்ப்பது காண முடியும். சுற்றுலாப் பயணிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது இந்த ஊசிமலை காட்சிமுனை.