சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி வழங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின் படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 59 நிமிடங்களில் கடன் பெறுவதற்கான முதல்கட்ட அனுமதியை வங்கிகள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் கடன் பெறுவதற்கு வங்கியின் கிளை மேலாளர்களை பல மாதங்கள் தொடர்ந்து நேரில் பார்த்து பிறகு வாய்ப்பு இருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. தற்போது அது ஓரளவுக்கு மாறியுள்ளது.
அதையும் எளிதாக்கும் வகையில் அதற்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகவல்களுடன் தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால் 59 நிமிடங்களில் சம்பந்தப்பட்ட வங்கிக் கடன் உதவிக்கான முதல் கட்ட அனுமதியை வழங்கும்.
அதன்பிறகு அந்த வங்கி அதிகாரிகள் குறிப்பிட்ட சில ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு தகவல் அனுப்புவார்கள். அவ்வாறு அவர்கள் கேட்கும் ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அவை சரிபார்க்கப்பட்டு உடனடியாக அவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடனுதவியை சம்பந்தப்பட்ட வங்கி வழங்கும். மேலும் விவரங்களுக்கு : www.psbloansin59minutes.com.