காடை வளர்த்து காசு பார்க்கலாம்...

தன்னம்பிக்கையுடன் உழைக்கத் தயாராக இருக்கும் பெண்கள், வீடுகளில் சிறிய இடத்திலேயே காடையை வளர்த்து அதிக வருவாய் ஈட்ட முடியும்.காடை வளர்ப்புத் தொழிலின் பின்னணி சரித்திரத்தோடு
காடை வளர்த்து காசு பார்க்கலாம்...

தன்னம்பிக்கையுடன் உழைக்கத் தயாராக இருக்கும் பெண்கள், வீடுகளில் சிறிய இடத்திலேயே காடையை வளர்த்து அதிக வருவாய் ஈட்ட முடியும்.
காடை வளர்ப்புத் தொழிலின் பின்னணி சரித்திரத்தோடு தொடர்புடையது. இரண்டாம் உலக போர் நடந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவில் இறைச்சி பற்றாக்குறை ஏற்பட்டது. அதைபோக்க அங்கு காடை வளர்ப்புத்தொழில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
அதன் பின்னர் ஜப்பானில் காடை முட்டை காசநோய் எதிர்ப்பு மருந்தாக கருதப்பட்டதால், காடை வளர்ப்புத் தொழில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.
இந்தியாவில் 1974-ஆம் ஆண்டு காடை வளர்ப்பு அறிமுகமானது. இந்திய அரசு வன விலங்குகள் பாதுகாப்புச் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொண்டு, காடைகளை வீட்டில் வளர்க்க அனுமதி அளித்துள்ளது.
காடை இனங்களில் இந்திய காடுகளில் வாழும் காடை, ஜப்பானியக் காடை, நந்தனம் காடை-1, நந்தனம் காடை- 2, பாப்வெள்ளை காடை, கலிபோர்னியா காடை, மலையில் வாழும் காடை, நியூ சிலாந்து காடை, சைனாக் காடை, மடகாஸ்கர் காடை, நியூகினியா மலைக்காடை போன்றவை குறிப்பிடத்தக்கவை. காட்டு இனம், பிரிட்டிஷ் இனம், இங்கிலீஷ் வெள்ளை இனம், மஞ்சூரியன் தங்க இனம், டக்ஸ்சிடோ இனம் போன்றவை ஜப்பானிய வகை காடைகளாகும்.
காடை இனங்களில் பாப் வெள்ளை குடும்பத்தை சேர்ந்தவை கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் காணப்படும். இதில் 20 பிரிவுகள் உள்ளன. அவற்றில் பாப் வெள்ளை, கருப்பு நிற தொடையுடைய பாப் வெள்ளை, கிரஸ்ட்டு பாப் வெள்ளை, மாங்கிடு பாப் வெள்ளை முதலிய இனங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த இனங்கள் பெரும்பாலும் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கோழி இன உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையத்தில்,அதிக அளவில் ஜப்பானியக் காடை குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
1987-ஆம் ஆண்டு நந்தனம் காடை 1-என்ற இனமும், 1993-ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட உற்பத்தி திறன்கொண்ட நந்தனம் காடை-2 என்ற புதிய இனமும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு உற்பத்தித் திறனை அதிகப்படுத்தும் வகையிலும், தொழில் முனைவோருக்கு அதிக எண்ணிக்கையில் காடை குஞ்சுகளை விற்பனை செய்திடும் வகையிலும்,தொடர் ஆராய்ச்சியின் மூலம் நந்தனம் காடை 3 என்கிற இனம் கடந்த 2005-ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது.
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கோழியின அறிவியல் உயர்கல்வி மையத்தில் குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டு, காடை குஞ்சுகள் பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பல்வேறு ஆராய்ச்சி மற்றும் சிறந்த இனப்பெருக்க முறைகளை பின்பற்றி, கடந்த 2006-ஆம் ஆண்டு நாமக்கல் காடை-1 என்ற இனம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வீரிய இன இறைச்சிக் காடையாகும். ஆண் காடை 313 கிராம் எடை கொண்டதாகவும், பெண் காடை 346.80 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும். இவற்றின் முட்டைகளை காலை மற்றும் மாலையில் சேகரித்து,அடைகாப்பானில் வைத்து குஞ்சு பொரிக்க செய்யலாம். குஞ்சு பொரிக்கும் விகிதம் 50 முதல் 53 சதவிகித அளவில் உள்ளது.
இதன் இளம் குஞ்சுகளை ஆழ்கூள முறையில் வளர்ப்பதை விட கூண்டு முறையில் வளர்த்தால் இறப்பு விகிதம் குறையும். முட்டை உற்பத்திக்கான காடையை 10 மாதம் வரையில் வளர்க்கலாம். இதன் முட்டையின் எடை 9 முதல் 13 கிராம் வரை இருக்கும்.
பண்ணையாளர்கள் கொட்டகை அமைக்க விரும்பினால் மேடான இடத்தை தேர்வு செய்திட வேண்டும். மழைபெய்தால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கக்கூடாது. குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதி இருக்கவேண்டும். கொட்டகையை கிழக்கு மேற்காக அமைத்திட வேண்டும்.
ஆழ்கூள முறை, கூண்டு முறை ஆகிய 2 முறைகளில் வளர்க்கலாம். கொட்டகையின் உள்ளே குளிர்காற்று நேரடியாக வீசினால் காடைகள் பாதிக்கப்படும். காற்று வேகமாக வீசி அவற்றின் தாக்காமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
குறைந்த மூலதனத்தில் காடை பண்ணை ஆரம்பிக்க நினைப்பவர்கள் கீற்றினால் வேயப்பட்ட கொட்டகையை அமைத்துக் கொள்ளலாம். இதனால் வெயில் காலத்தில் கொட்டகையின் உள்ளே குளுமையாக இருக்கும். அதிக செலவும் ஆகாது. அதே நேரத்தில் எளிதில் தீப்பற்ற வாய்ப்பு இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகாத வகையில் அமைக்க வேண்டும். அதிக நாள்கள் நீடித்து உழைக்க கூடிய பண்ணையை அமைக்க நினைப்பவர்கள் லைட்ரூப் கொண்டு கொட்டகை அமைக்கலாம். கீற்றுக் கொட்டகையைபோல் இதை அடிக்கடி மாற்றவேண்டி வராது.
பெரிய அளவில் பல காலத்திற்கு நீடித்து இருக்கும் வகையில், காடை பண்ணை கொட்டகை அமைக்க நினைப்பவர்கள் சீமை ஓடு அல்லது ஆஸ்பெட்டாஸ் கூரை கொண்டு கொட்டகை அமைக்கலாம். பண்ணை ஆரம்பிக்கும் சமயத்தில் இதற்கு அதிக மூலதனம் தேவைப்படும்.
காடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், அலகு வெட்டுதல், தடுப்பூசி அளித்தல் போன்ற பராமரிப்பு செலவு அவ்வளவாக இல்லை. அதோடு கோழிகளை போன்று காடைகளை நோய் கிருமிகள் எளிதில் பாதிப்பதில்லை. இதனால் மருத்துவ செலவும் குறைகிறது.
முட்டைக்காக வளர்க்கப்படும் காடைகள் ஆறுவார காலத்தில் முட்டையிடத் தொடங்கி விடுகின்றன. காடை முட்டைகளில் அதிக புரதம் இருப்பதால் அனைவரும் விரும்புகிறார்கள். இதற்கான விற்பனை வாய்ப்பு அதிகமுள்ளது. 
ஒரு காடை ஆண்டுக்கு 220 முதல் 230 முட்டைகள் வரை இடுகின்றன. மேலும் 5 வாரங்களில் ஒரு காடையில் இருந்து 220 கிராம் இறைச்சியும் கிடைக்கிறது.
ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட நாமக்கல் காடை 1 என்ற இனம் பெருமளவில் உள்ளது. 
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஆலோசனை படி,கண்ணதங்குடி கீழையூர் அருகிலுள்ள கீழஇலந்தவெட்டி அருணன்- மாலா தம்பதியினர் காடை வளர்ப்பு , கோழி, மற்றும் வான் கோழி வளர்ப்புக் குறித்து கூறியது:
நாங்கள் நாட்டுக்கோழி, காடை மற்றும் வான் கோழி போன்றவற்றை வளர்த்து வருகிறோம். கால்நடை கல்லூரியில் காடை குஞ்சு ஒன்று ரூ. 6- க்கு வாங்கி, அதை முறையாகப் பராமரித்து வளர்த்தால் 30 நாள்களில் ஒரு காடை ரூ 30 முதல் ரூ 35 வரை விற்பணை செய்யலாம். இந்த பகுதியிலுள்ள உணவகத்துக்கு வாரத்தில் 200 காடை கொடுத்து வருகிறோம். மேலும் எங்கள் இடத்துக்கே வந்து பலரும் காடை வாங்கிச் செல்கின்றனர். இத்துடன் சேர்த்து நாட்டுக்கோழி மற்றும் வான் கோழியும் வளர்த்து வருகிறோம். நாட்டுக் கோழி பெரும்பாலும் கோயில் திருவிழா நேரங்களிலும், விசேஷ நாள்களிலும் அதிகளவில் விற்பனை நடைபெறும். வான்கோழியை பொறுத்தவரையில் 1 நாள் வயதுடைய குஞ்சு வாங்கி 5 மாதம் வரை வளர்த்தால், ஒரு வான் கோழி ( 3 கிலோ எடையுடையது) ரூ 750 விற்பணை செய்யலாம். தற்போது தீபாவளி நெருங்கி வருவதால் வான் கோழி விற்பனை அமோகமாக இருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர் இத்தம்பதியினர்.
- வி. பழனிவேல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com