உங்களுக்குத் தெரியுமா..? தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி தோற்றமும் வளர்ச்சியும் - 1

சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வந்த ஆக்சிலரி மருத்துவ பள்ளி மூடப்பட்டு, சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.
உங்களுக்குத் தெரியுமா..? தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி தோற்றமும் வளர்ச்சியும் - 1


1875 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி இன்னொரு வரலாறு படைக்கப்பட்டது. இந்தியாவில் இதன் முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் Licentiate of Medicine & Surgery (LMS) என்ற புதிய பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது. 

1835 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி 1885 ஆம் ஆண்டு வரை 50 ஆண்டுகளில் 1523 இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு துணை மருத்துவ சேவைக்கான பயிற்சியை அளித்தத. அவர்களில் 24 பேர் மருத்துவ பட்டம் பெற்றவர்கள். 

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி: 
சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வந்த ஆக்சிலரி மருத்துவ பள்ளி மூடப்பட்டு, சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அப்பள்ளியின் மருத்துவ பயிற்சிப் பிரிவு மாணவர்கள் மோனகர் கவுல்ட்ரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 1889 - 90 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிய ஆய்வகமும் அலுவலகக் கட்டிடமும் கட்டப்பட்டன.

1886 ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் இருந்த மருத்துவப் பள்ளிகளில் ராயபுரம் ஆக்சிலரி மருத்துவப் பள்ளி, தஞ்சாவூரில் உள்ள பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மருத்துவப் பள்ளி ஆகியவை அடங்கும்.

சென்னை மாநிலத்தில் பஞ்சத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை சமாளிக்க மருத்துவப்பள்ளி, துணை மருத்துவத்துறையாக உயர்த்தப்பட்டது. அதன் பின் 1879 ஆம் ஆண்டில் இது சென்னை மருத்துவக்கல்லூரியின் இணைப்பு அதிகாரம் பெற்றது. அப்போதிருந்த அரசு எடுத்த கொள்கை முடிவின்படி, 1900 முதல் 1920 ஆண்டு வரை தமிழகத்தில் இருந்த அனைத்து மருத்துவப்பள்ளிகளும்(ஆக்சிலரி தவிர) மூடப்பட்டன. 

1933 ஆம் ஆண்டு ஆக்சலரி மருத்துவப் பள்ளி ஸ்டான்லி மருத்துவப்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1938 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி இப்பள்ளி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. 

கிறித்துவ மருத்துவக் கல்லூரி: கிறித்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. 1900 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி வேலூரில் அமைந்துள்ளது. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும். மருத்துவர் ஐடா சோபியா ஸ்கட்டர் என்பவரின் முயற்சியால் வேலூரில் ஒரு மருத்துவமனையும், பின்னர் 1908 இல் செவிலியர் பயிற்சி பள்ளியும் தொடங்கப்பட்டன. பின்னர் அவரின் தொடர் முயற்சியால் 1918 ஆகஸ்ட் 12 ஆம் தேதி யூனியன் மிஷனரி பள்ளி என்ற பெயரிலான பெண்களுக்கான மருத்துவப் பள்ளியாக தொடங்கப்பட்ட இதை சென்னை மாகாண ஆளுநர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார்.

பின்னர் இது கல்லூரியாக மாறியது. 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது முதல், இங்கு பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர். 1959 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த மருத்துவக் கல்லூரிக்கு சென்னை பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியது. இக்கல்லூரியில் எம்டி., எம்.எஸ்., போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளையும், காசநோய் மருத்துவத்திற்கான பட்டயப்படிப்புகளையும் வழங்கி அனுமதி அளித்தது. 

இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள கிறித்துவ மிஷனரி சங்கங்களும் 39 சர்ச்களும் இணைந்து இக்கல்லூரியை நடத்துகின்றன. இந்த அமைப்புகளில் பிரதிநிதிகள் அடங்கிய இந்தியக் குழுதான் இக்கல்லூரியை நிர்வகிக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் மிகச் சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாக கிறித்துவ மருத்துவக் கல்லூரி திகழ்கிறது. இதன் நிறுவனர் மருத்துவர் ஐடா சோபியா ஸ்கட்டர் ஆவார். இந்த மருத்துவக்கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி: 
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி என்று இப்போது அழைக்கப்படும் இந்த கல்வி நிறுவனம் 1924 ஆம் ஆண்டில் இந்திய அரசு மருத்துவப் பள்ளி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அதன் பின் 1948 ஆம் ஆண்டு இந்திய மருத்துவமுறைக் கல்வி நிறுவனமாக மாற்றப்பட்டது. 

இக்கல்லூரியில் இந்திய உள்நாட்டு மருத்துவப் பட்டம் (GCIM) என்ற பெயரில் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் உள்நாட்டு மருத்துவம் என்ற பெயர் நீக்கப்பட்டு ஒருங்கிணைந்த மருத்துவப் பட்டம் பெயரில் பட்டம் வழங்கப்பட்டது. அதன்படி, இக்கல்லூரியில் இந்திய மருத்துவம், நவீன மருத்துவம் ஆகிய இருவகை மருத்துவமும் கற்றுத்தரப்பட்டது.

இந்த மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட்ட GCIM பட்டத்தை நிறுத்துவதென 1960 ஆம் ஆண்டில் அரசு முடிவு செய்யப்பட்டு அந்த ஆண்டே ஒருங்கிணைந்த மருத்துவக் கல்லூரியாக தமிழக அரசால் மாற்றப்பட்டு (தொடங்கப்பட்டு) அலோபதி மருத்துவம் கற்றுத்தரப்பட்டு எம்பிபிஎஸ் பட்டம் வழங்கப்பட்டது. இக்கல்லூரி வளாகம் சென்னை அண்ணா நகர் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com