உலகம் முழுவதும் காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான மலர் ரோஜா மலர். காதலன் காதலியிடம் காதலைத் தெரிவிக்கும்போது ரோஜா கொடுத்து காதலை தெரிவிப்பது திரைப்படத்தில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. காதல் என்றாலே நினைவு வருவது ரோஜாதான்.
அந்தவகையில், ரோஜா மலர் உற்பத்திக்குப் பெயர் பெற்ற பகுதி ஒசூர் என்பது இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பேசப்படுகிறது.
ஒசூரில் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவி வருவதால் இங்கு பசுமை குடில்கள் மூலமாகவும், திறந்தவெளியிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ரோஜா மலர்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
குறிப்பாக தாஜ்மஹால், கிரான்ட் காலா, அவலான்ஸ், நோப்ளஸ், உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கலர் பூக்களை உற்பத்தி செய்து நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, சௌதி அரேபியா, ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
கடந்த இரண்டு வருட காலமாக கரோனாவின் தாக்கத்தால் களையிழந்த விவசாயிகள் மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளனர். ஏன்னெனில் உற்பத்தி செய்யப்பட்டு மலர்களை ஏற்றுமதி செய்ய முடியாமலும் உள்ளூர் சந்தையில் விற்க முடியாமலும் திருமணம் மற்றும் விழாக்கள் தடைபட்டதால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இதன் காரணமாக சில விவசாயிகள் பூக்கள் உற்பத்தி செய்வதையே நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வருடம் கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கோடி ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்து நல்ல பலன் தந்ததாகவும் அதேபோல் உள்ளூர் விற்பனையும் களைகட்டி உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
40 சென்டிமீட்டர் தண்டு கொண்ட 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச் ரூ. 400 முதல் 500 வரை, அதாவது ஒரு பூ விலை 20 முதல் 25 வரை விற்கப்படுவதாகவும் தெரிவித்த விவசாயிகள், கடந்த காலங்களில் ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்து மிகுந்த சிரமத்தை சந்தித்ததாகவும் தெரிவித்தனர். ஆனால், இந்த வருடம் பூக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அதேசமயம் காதலர் தினம் முகூர்த்த நாட்கள் என ஒரு சேர வந்துள்ளதால் விற்பனையும் அதிகரித்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.