மொழிப்பயிற்சி-7: பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்!

வல்லெழுத்து மிகா இடங்கள் 1. அது, இது, எது முன் மிகாது. (எ-டு) அது பெரிது, இது சிறிது, எது கரும்பு? 2. அவை, இவை, எவை முன் மிகாது. (எ-டு)அவை சென்றன, இவை கண்டன, எவை தின்றன? 3. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு?
மொழிப்பயிற்சி-7: பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்!

வல்லெழுத்து மிகா இடங்கள்

1. அது, இது, எது முன் மிகாது.

(எ-டு) அது பெரிது, இது சிறிது, எது கரும்பு?

2. அவை, இவை, எவை முன் மிகாது.

(எ-டு)அவை சென்றன, இவை கண்டன, எவை தின்றன?

3. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு?

(எ-டு) அவ்வாறு சொன்னார், இவ்வாறு செப்பினார், எவ்வாறு கண்டார்?

4. ஒரு, இரு, அறு, எழு என்னும் எண்களின் முன் மிகாது.

(எ-டு) ஒரு கோடி, இரு தாமரை, அறுபதம், எழுசிறப்பு.

5. பல, சில முன் மிகாது.

(எ-டு) பல சொற்கள், சில பதர்கள், பல தடைகள், சில கனவுகள்.

6. உகர ஈற்று வினையெச்சங்கள் முன் மிகாது.

(எ-டு) வந்து சென்றான், நின்று கண்டான்.

7. அத்தனை, இத்தனை முன் மிகாது.

(எ-டு) அத்தனை குரங்குகள், இத்தனை பசுக்களா?

குறிப்பு: அத்துணை முன் மிகும்.

(எ-டு) அத்துணைப் பெயர்களா? இத்துணைச் சிறப்பா?

8. பெயரெச்சம் முன் மிகாது.

(எ-டு) ஓடாத குதிரை, வந்த பையன், பறந்த புறா

குறிப்பு: ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.

(எ-டு) ஓடாக் குதிரை, பாடாத் தேனீ

9. என்று, வந்து, கண்டு முன் மிகாது.

(எ-டு) என்று சொன்னார், வந்து சென்றார், கண்டு பேசினார்.

வல்லொற்று மிகுமிடங்கள், மிகாவிடங்கள் அனைத்தும் ஈண்டு உரைக்கப்படவில்லை. சுருக்கமான பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனில் வரும் சில இலக்கணச் செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

வேற்றுமை உருபுகள் (2 முதல் 7 முடிய) விரிந்து (வெளிப்படையாக) இருப்பின் வேற்றுமை விரி எனப்படும். நூலைக் கற்றான் - இதில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பாடாக உள்ளது. உருபு மறைந்துவரின் வேற்றுமைத் தொகை எனப்படும். பால் பருகினான் - இதில் பாலைப் பருகினான் எனும் பொருள் புலப்பட்டாலும் ஐ என்னும் உருபு மறைந்துள்ளது.

ஒரு வினைச் சொல் நிற்க, அது பொருள் நிறைவு பெறாமல் இருந்து,வேறொரு வினைச் சொல் கொண்டு நிறைவுற்றால் அது வினையெச்சம். (எ-டு) வந்து (முற்றுப் பெறாத வினை) நின்றான் என்ற வினைமுற்றைக் கொண்டு நிறைவு பெறும். இதுபோல் முற்றுப் பெறாத வினை, ஒரு பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் எனப்படும். வந்த (முற்றுப் பெறாத வினை) பையன் என்னும் பெயரைக் கொண்டு முடிந்தது. இந்த வகையான பெயரெச்சத்தில் ஈற்றெழுத்து (வினையின் கடைசி எழுத்து) இல்லாமற் போயிருந்தால் (கெட்டிருந்தால்) அது ஈறு கெட்ட பெயரெச்சம்; அதுவே எதிர்மறைப் பொருளும் (இல்லை என்பது) தருமானால் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

(எ-டு) உலவாத் தென்றல் - உலவாத தென்றல் என்பதில் "த்' என்னும் ஈற்றெழுத்துக் கெட்டு (இல்லாமற் போய்) உலவா என நின்று "த்' வல்லொற்றுடன் கூடி உலவாத் தென்றல் ஆயிற்று. தென்றல் உலவும் (அசையும்) இது உலவாத (அசையாத) என்னும் எதிர்மறைப் பொருள் தருதல் காண்க.

ஆறு தொகையுள் ஒன்று பண்புத் தொகை. பண்பு உருபு ஆகி மறைந்து கெட்டிருக்கும். "மை' விகுதியும் கெட்டிருக்கும். (எ-டு) செந்தாமரை- இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும். இருபெயர் ஒட்டிப் பண்புத் தொகையாக வரின் அது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும். (எ-டு) வட்டக்கல் - வட்டமாகிய கல். கல்லே வட்டம். வட்டமே கல்.

(தமிழ் வளரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com