ஆஸ்கர் விருது மட்டுமல்லாமல், சர்வதேச திரைப்பட விருதுகள் பலவற்றைப் பெற்றிருப்பவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. அவர் தனக்கு புற்றுநோய் வரப்போகிறது என்று முன் கூட்டியே அறிந்து, அதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டவர். அவர் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பெண்களின் மத்தியில் விதைத்தவர்.
உலகமெங்கும் பல்வேறு காரணங்களால் சொந்த நாட்டினை விட்டுப் புலம் பெயர்ந்து பல நாடுகளில் அகதிகளாய் வாழ்பவர்களின் முகாம்களுக்குச் சென்று, அகதிகளை சந்தித்து ஆறுதல் சொல்லி பல பொருளாதார உதவிகள் செய்தவர்.
மனித, பெண்கள், அகதிகள் உரிமைகள் குறித்து குரல் எழுப்பிவரும் ஏஞ்சலினா, இப்போது எல்லாரையும் திகைக்க வைக்கும் புது அவதாரம்
எடுத்திருக்கிறார்.
ஆம்... ஏஞ்சலினா பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தில், மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், உலக அமைதி, பாதுகாப்பு, பாலியல், ராணுவ ஆதிக்கம்
போன்ற பாடங்களைக் கொண்டிருக்கும் ஓராண்டு முதுநிலை பட்டப்படிப்பு வகுப்பிற்காக ஏஞ்சலினா பாடம் நடத்தும் பேராசிரியையாக
நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏஞ்சலினா நடிகையாகவும் தொடர வேண்டும் என்பதால், முழு நேரப் பேராசிரியையாக இல்லாமல் வருகைதரும்
(visiting) பேராசிரியராக அவர் பொறுப்பேற்றிருக்கிறார். இது குறித்து ஏஞ்சலினா...
"இந்தப் புதிய பொறுப்பு எனக்குப் பெருமை தருவதாக அமைந்துள்ளது. கொஞ்சம் கர்வத்தையும் தந்திருக்கிறது. என் மேல் உள்ள நம்பிக்கையில் இந்த
பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதனை எனக்குக் கிடைத்த அங்கீகாரம், கெளரவம் என்றே கருதுகிறேன். மனித உரிமை, பெண்கள் உரிமை, அகதிகள் உரிமைகள்
தொடர்பான எனது செயல்பாடுகளை இது இன்னமும் ஊக்குவிக்கும். ஏனைய கல்வி நிறுவனங்களும் இதை ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு
பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறைகள் போன்றவற்றில் பெண்களின் உரிமைகள் நீர்த்துப் போகாமல் இருக்க கருத்துப் பரிமாற்றம்,
விவாதங்களை இன்னும் விரிவாக்கம் செய்ய இந்த பேராசிரியை அங்கீகாரம் உதவும் என நம்புகிறேன். அனுபவங்கள் மூலம் மாணவர்களுக்கு எனக்குத்
தெரிந்தவற்றைக் கற்பிக்கவும், அவர்களிடமிருந்து எனக்குத் தெரியாதவற்றை கற்றுக் கொள்ளவும் இது ஒரு பொன்னான வாய்ப்பு'' என்கிறார் ஏஞ்சலினா..
தான் பெற்றெடுத்த மூன்று குழந்தைகளுடன், மூன்று அகதி குழந்தைகளையும் தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சிரியா அகதிகளில் ஒரு குழந்தையைத்
தத்து எடுக்கும் ஆலோசனையில் தற்சமயம் ஏஞ்சலினா மூழ்கியிருக்கிறார்.
அகதிகள் மறுவாழ்வு, மகளிர் மேம்பாடு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பணிகளுக்கு, ஐ.நாவின் சிறப்பு நல்லெண்ணத் தூதுவரும்
ஏஞ்சலினாதான்..
ஏஞ்சலினாவின் பள்ளிக் காலம் ரொம்பவும் சுவாரஸ்யமானது.
ஏஞ்சலினா படிக்க முயற்சிக்காத படிப்புகள் இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான படிப்பும் படித்தார். ஆனால் எதையும் முறையாகப் படித்து
முடிக்கவில்லை. ஏஞ்சலினா பள்ளியில் படிக்கும் போது வகுப்புகளுக்கு நன்றாகவே மட்டம் போட்டவர்.
படிப்பில் ஏஞ்சலினா ஏனோதானோ என்று இருக்கக் காரணம் அவர் நடிகையாக வேண்டும் என்று அதீதமாக விரும்பியதுதான். காரணம்; அவரது
பெற்றோர்கள் நடிகர்களாக இருந்ததுதான். அப்படிப்பட்ட ஏஞ்சலினா, பேராசிரியையாக வகுப்பில் எப்படிப் பாடம் நடத்தப் போகிறார் என்பதை
அறிய உலகமே காத்திருக்கிறது.
-பனிமலர்