மதிய சாப்பாட்டு இடைவேளையில் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸைத் திறந்தான் கண்ணன். உள்ளே அவனுக்குப் பிடிக்காத சப்பாத்தி. அவன் தன் மனைவியிடம், "தயிர்சாதம், ஊறுகாய் இருந்தால் போதும்... சப்பாத்தியெல்லாம் வேண்டாம்'' என்று பலமுறை சொல்லியிருக்கிறான். இருந்தும் சப்பாத்தி கொடுத்தனுப்பியிருக்கிறாள். ஆபிஸ் முடிந்து வீட்டுக்குப் போனதும் அவளை நன்றாகத் திட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
மாலை வீட்டுக்குப் போனதும் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டான்.
பள்ளிக்குச் சென்றுவிட்டு டியூஷன் போய்விட்டு சோர்ந்து போய் வந்த மகன் ராஜு கண்ணனைப் பார்த்துச் சொன்னான்:
"எனக்கு அம்மா கொடுத்த சப்பாத்தியை நீங்க எடுத்துட்டுப் போயிட்டீங்க... எனக்குத் தயிர்சாதம் பிடிக்காது. மத்தியானம் நான் சாப்பிடவே இல்லை''
சி.பழனிசாமி, கிழக்கு தாம்பரம், சென்னை-59