எல்லாம் எனக்கே!

""செல்வி, இங்கே வாம்மா.'' 
எல்லாம் எனக்கே!

""செல்வி, இங்கே வாம்மா.'' 
செல்வியின் அம்மா மலர்விழி, அழைப்பது கேட்டது செல்விக்கு. செல்வி இப்போதுதான் வணிகத்தில் முதுகலைப் படித்துவிட்டு வேலைக்காக முயன்று கொண்டிருக்கிறாள். ஒரே பெண் என்பதால் ஏகப்பட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவள். தனக்குப் பிடித்த பொருள்களைப் பிறர் தொடுவதைக் கூட விரும்பாத சுயநலம் மேலோங்கும் எண்ணம் கொண்டவள். அவளுடைய எண்ணத்தில் வன்மம் ஏதும் இல்லை என்றாலும், கிடைப்பதில் அரிதானவையோ அல்லது அழகானவையோ தனக்கே கிடைக்க 
வேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு சிறுவயது முதல் இருந்துவருகிறது. ஒரே பெண் என்பதால் அவள் கேட்டதெல்லாம் நடந்துவருகிறது.
""செல்வி''
மீண்டும் அம்மா அழைப்பதைக் கேட்டு, செல்வி எழுந்து அம்மா இருக்கும் அறை நோக்கிச் சென்றாள். 
""செல்வி, நேற்று என்னுடைய சிநேகிதி பார்வதியுடன் பாண்டி பஜார் சென்றிருந்தேன். அப்போது எனக்குப் பிடித்தது என்பதால் இரண்டு சுடிதார் 
வாங்கி வந்தேன். உனக்குப் பிடித்தால் நீ எடுத்துக்கொள்'' என்று அம்மா ஒரு பிளாஸ்டிக் உரையை செல்வியின் பக்கம் நீட்டினார்.
""உனக்கு வேண்டுமென்று வாங்கி கொண்டாயா? எனக்கு ஏன் வாங்கவில்லை?'' என்று சினத்துடன் அந்த பிளாஸ்டிக் உரையை பிடுங்கிக் கொண்டாள் செல்வி.
""உனக்கு பிடித்திருந்தால் இரண்டையுமே எடுத்துக்கொள்'' என்று அம்மா சொல்வதற்கு முன்னர், ""இந்த ஆரஞ்சு சுடிதார் அழகாக உள்ளது. அதை நான் எடுத்துக்கொள்கிறேன். அந்த மங்கிய வண்ணத்தில் மஞ்சள் சுடிதாரை வேண்டுமானால் நீ எடுத்துக்கொள்'' என்று கூறிவிட்டு ஆரஞ்சு சுடிதாரை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பினாள் செல்வி.
""இரண்டும் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்'' என்ற அம்மாவின் பேச்சுக்கு பதிலேதும் சொல்லாது செல்வி சென்றுவிட்டாள். மலர்விழி தன்னுள் சிரித்துக்கொண்டாள். இது அவளுக்குப் புதிதல்ல. செல்வியின் போக்கை அவளுடைய சிறுவயதிலிருந்து நன்கு அறிந்தவள் மலர்விழி. ஏதாவது அவளுக்குப் பிடித்திருந்தால், அதை அவள் அடையும் மட்டும் விடமாட்டாள். பிடிக்காதென்றால், கண்டுகொள்ள மாட்டாள். 
என்ன இருந்தாலும் செல்வி, அவர்களின் ஒரே மகள். அவர்களுக்குத் திருமணமாகி பல வருடங்கள் கழித்துப் பிறந்ததால் இருவரின் செல்லப்பிள்ளையாகவே செல்வி வளர்ந்தாள். அதனால், செல்வியின் இத்தகைய போக்கு, அவள் தாய் தந்தையருக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. 
செல்வியின் அப்பா ஞானவேலும் ""நம்முடைய குழந்தை தானே! கொடு மலர்விழி!'' என்று சொல்வதே அவரது வழக்கம். எப்போதும் அவள் கேட்டதைக் கொடுப்பதில் இருவருக்கும் பரம சந்தோஷம்.
ஞானவேல் அப்படி ஒன்றும் செல்வந்தர் இல்லையென்றாலும், ஒரே மகள் என்பதால் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு சம்பாதிக்கும் அரசு ஊழியர். அவள் கேட்ட அந்த நாளே எந்தப் பொருளும் அவளுக்குக் கிடைத்துவிடும். 
துணிகளைப் பரப்பிக் கொண்டு அமர்ந்திருந்த தன் மனைவியைக் கண்ட ஞானவேல், ""என்ன நினைப்பு? எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே?'' என்றபடி அறைக்குள் நுழைந்தார்.
""நேற்று வாங்கிவந்த சுடிதாரில் ஒன்றை செல்வி எடுத்துகொண்டு விட்டாள்''
""ஏன் இரண்டையுமே எடுத்துக்கொள்ளவில்லையா? நன்றாக இல்லையா?''
""தெரியவில்லை. அவளுக்குப் பிடித்ததை எடுத்துக்கொண்டுவிட்டாள்.''
""சரி அதனால் என்ன? அவள் தானே நமக்கு? அதற்கு எதற்கு இத்தனை யோசனை?''
""யோசனை ஒன்றும் இல்லை''
""அவள் கேட்பதை எல்லாம் தாம் நாம் கொடுத்துக்கொண்டு வருகிறோமே? அந்த விஷயம் நினைவுக்கு வந்தது..''
""எது?''
""அதான் மலர்விழி, செல்வி ஆறாவது படிக்கும் போது...''
""போதும் நிறுத்துங்க. அதைப்பற்றி பேசத்தேவையில்லை""
மலர்விழி செய்யும் வேலையில் சிந்தையைச் செலுத்தலானார்.

அப்போது செல்வி ஆறாவது படித்துக்கொண்டிருந்தாள். ஒரு நாள் அவள் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது அழுதுகொண்டே வந்தாள்.
""என்ன செல்வி, ஏன் அழுகிறாய்?'' என்றபடி அவளை அனைத்தார் மலர்விழி.
""இனிமேல் நான் பள்ளிக்குப் போக மாட்டேன் அம்மா.''
""ஏன்? என்ன ஆயிற்று?''
""எனக்கு அசிங்கமாக இருக்கிறது''
""என்ன ஆயிற்று என்று சொல்லு''
""எல்லோரும் என்னை மூளி என்று கிண்டல் செய்கிறார்கள்''
மலர்விழிக்குப் புரிந்துவிட்டது. இதுவரை சிறுமியாய் இருந்ததால், செல்விக்கு அந்த விஷயம் பெரிதாகப் படவில்லை. இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது.
""செல்வி, நீ அதை ஏன் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? யார் எது சொன்னால் உனக்கென்ன?''
""முடியாது அம்மா. என்னால் இனிமேல் பள்ளிக்குச் செல்ல முடியாது. அசிங்கமாக உள்ளது''
செல்வி அடம்பிடிக்கத் தொடங்கினாள். அதற்குள் ஞானவேல் அலுவலகத்திலிருந்து வந்துவிடவே, செல்வி, மலர்விழியின் கைப்பிடியிலிருந்து ஞானவேலின் கைகளுக்குத் தாவினாள்.
அழுது கிடக்கும் செல்வியைக் கண்ட ஞானவேலுக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. ""என்ன செல்வி, எதற்கு அழுது கொண்டிருக்கிறாய்?''
""அப்பா, நான் இனிமேல் பள்ளிக்குச் செல்ல மாட்டேன், எனக்கு அசிங்கமாக உள்ளது''
""ஏன்? என்னவாயிற்று?''
திடீரென்று தன்னுடைய காதருகே இருந்த கூந்தலைத் தள்ளி விட்டு செல்வி, ""இதோ இதனால் தான்! எல்லோரும் என்னை மூளி என்கிறார்கள். நான் இனிமேல் பள்ளிக்கே செல்ல மாட்டேன்.''
ஞானவேலுக்குப் புரிய ஆரம்பித்தது.
""சரி விடு செல்வி, இந்த வாரம் பள்ளிக்குச் செல்ல வேண்டாம். அடுத்த திங்கள் சென்றால் போதும். நாம் எங்காவது வெளியே செல்வோம்'' என்று பேச்சை மாற்றி செல்வியின் அழுகையைக் குறைக்க நினைத்தார்.
ஆனால் அவர் நினைத்தவண்ணம் ஒரு வாரத்தில் முடியும் விஷயமாக அமையவில்லை அது. செல்வி பிறக்கும்போதே காதுமடல்கள் இல்லாமல் பிறந்தாள். இலட்சத்தில் ஒருவருக்கு அத்தகைய நிலை வரலாம் என்பது மருத்துவக் கணிப்பு. உள்ளுக்குள் சற்று கவலையாக இருந்தாலும் மலர்விழிக்கும், ஞானவேலுக்கும் இது பெரிய குறையாகப் படவில்லை. தவிர, பிறப்பிலிருந்தே அவர்கள் செல்வியை அவ்வாறு பார்த்துப் பழகி வருவதால், அது ஒரு குறையாக அவர்கள் கண்களுக்குப் புலப்படுவதே இல்லை. செல்விக்கும் அதுகுறித்த கவலை இல்லைதான். ஆனால், இப்போது அது பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.
எவ்வளவோ சொல்லியும் செல்வி பள்ளி செல்வதாக இல்லை. அப்படியே ஆறு மாதம் ஓடிவிட்டது. படிப்பும் தொடரமுடியாத நிலையில், ஞானவேல் ஒரு மருத்துவரைப் பார்த்து இக்குறையைத் தீர்க்க ஏதேனும் வழியுண்டா என வினவினார். ""இது கொஞ்சம் பெரிய பிரச்சனை. யாரேனும் காதுமடல்களைத் தானம் செய்தால், அம்மடல்களை செல்விக்குப் பொருத்தி இக்குறையைச் சரி செய்யலாம்'' என மருத்துவர் கூறினார். ""ஆயினும் காதுமடல் தானம் கிடைப்பது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை. உடனேயும் கிடைக்காது. நிதானமாகவே ஆகும்'' என்றும் கூறினார். 
அந்தப் பேச்சிற்குப் பிறகு ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. தானம் கொடுப்பவர் அரிதாகவே கிடைத்தனர். கிடைத்தாலும், அது செல்விக்கு மருத்துவ ரீதியில் பொருந்தாது என்று மருத்துவர் சொல்லிவிட்டதால். நாட்கள் கடந்தன. பிறகு ஒருவாறாகக் காதுமடல் பொருத்தும் அந்த சிகிச்சையும் நடந்தேறியது. அதற்குப்பின்னரே செல்வி மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாள். இதனால் ஒரு வருடப் படிப்பும் வீணாகியது.

""அப்பா, நான் சொன்ன புத்தகத்தை வாங்கி 
வந்து விட்டீர்களா?'' என்று செல்வி கேட்ட கேள்வியே ஞானவேலை, கடந்த காலத்திலிருந்து, நிகழ்காலத்திற்கு வரவழைத்தது.
""அடடே! மறந்தே போயிற்று செல்வி. இதோ இந்தா'' என்று சொல்லிய வண்ணம் தன்னுடைய கைப்பையிலிருந்து அவள் கேட்ட அந்தப் புத்தகத்தைத் தந்தார் ஞானவேல்.
செல்வி மீண்டும் அந்த அறையை விட்டு அகன்றதும், ஞானவேல், மலர்விழியிடம் ""இன்று என் பழைய நண்பன் முருகேசனைப் பார்த்தேன்.'' என்றார்.
""ஓ, அவரா? எப்படியுள்ளார். நீங்கள் பார்த்தே பல வருடம் ஆகியிருக்குமே?''
""ஆம். ஏழெட்டு ஆண்டுகள் ஆகியிருக்கும்''
""எப்படியுள்ளார்?''
""நன்றாக உள்ளதாகக் கூறினார். இன்னொரு விஷயத்தையும் சொன்னார்''
""என்ன?''
""அவருக்கு ஒரு மகன் இருப்பது உனக்குத் தெரியுமல்லவா? அவர் மகனுக்கு நம் பெண்ணை மணம் 
செய்து வைக்கக் கேட்டார்''
""அப்படியா? அவ்வளவு எளிதில் பதில் சொல்லிவிடமுடியாதே. செல்வி என்ன சொல்வாளோ? முதலில் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கட்டும். பின்னர் பேசிக் கொள்ளலாம்''
""நானும் அதையே தான் முருகேசனிடம் சொன்னேன். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வீட்டிற்குச் செல்வோம்''
""சரிதான், இதுவும் நல்லபடியாய் நடந்தால் சரி'' 
என்றபடி மலர்விழி சமையல் அறையை நோக்கிச் சென்றாள்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. அதன் பிறகு நடந்த பல்வேறு சந்திப்புகளுக்குப் பிறகு, திருமணம் நிச்சயமாகியது.
திருமணம் நிச்சயமான மகிழ்ச்சியில் ஞானவேல், திருமண வேலைகளில் ஈடுபடலானார். வீட்டில் மலர்விழி, அன்று செல்வியைக் கூப்பிட்டாள். ""செல்வி, இங்கே வாயேன்''
""என்னம்மா? இந்த சீரியல் பார்த்தவுடன் வருகிறேன்''
""இல்லை. இப்போதே வா'' என்று செல்வியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றார் மலர்விழி.
""திருமணத்திற்கு உனக்கான நகைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம்மிடம் இருக்கும் நகைகளில் உனக்கு எவையெல்லாம் பிடிக்கும் என்றுசொன்னால், அவற்றை மெருகேற்ற அனுப்பி விடலாம்''
அலமாரியிலிருந்து ஒரு சதுர வடிவிலான நகைப்பெட்டியை மலர்விழி படுக்கையின் மீது எடுத்து வைத்தார். 
""இதோ பார் செல்வி. இவையெல்லாம் கொலுசுகள். உனக்கு இவற்றிலிருந்து எவை வேண்டுமோ அவற்றைத் தனியே எடுத்து வை''
""என்னம்மா இது, எல்லாக் கொலுசும் வெள்ளியாகவே உள்ளதே! நீ மட்டும் பொன் கொலுசுசைப் போட்டுக்கொள்வாய். எனக்கு வெறும் வெள்ளியா?'' சிடுசிடுத்தவாறே சொன்ன செல்வியின் பேச்சைக்கேட்டு, மலர்விழி, தன் காலிலிருந்த பொன் கொலுசை அவிழ்த்து ஒரு தனிப்பெட்டியில் வைத்தவாறே, ""இதோ, அது இனிமேல் உனக்குத்தான். போதுமா?'' என்ற மலர்விழியைப் பார்த்துப் புன்னகைத்தாள் செல்வி.
""சரி சரி. நான் போகட்டுமா?'' என்ற செல்வியின் கையை மீண்டும் இழுத்து மலர்விழி மற்றொரு பெட்டியைக் கொடுத்தார். 
""இதோ பார். இது கழுத்துச் செயின் மற்றும் வைர அட்டிகைகள். இவையெல்லாம் உனக்குத்தான். எனக்கு இப்போது நான் போட்டிருக்கும் அட்டிகையே போதும்'' 
உடனே மலர்விழியின் கழுத்தைப் பார்த்த செல்வி, ""அதெல்லாம் கிடையாது, இது எனக்குத்தான். நீ வேண்டுமானால், இதோ, இதோ, இதை வைத்துக்கொள்'' என்று கூறியவாறு அந்தப் பெட்டியிலிருந்து ஒரு இரட்டைவடம் செயினை மலர்விழிக்குக் கொடுத்துவிட்டு, ""அதைக்க் கழட்டி பெட்டிக்குள் வை. அது எனக்குத்தான்'' என்றாள்.
மலர்விழியின் முகத்தில் மீண்டும் மலர்ச்சி பொங்கியது. ""சரி. இதோ எடுத்துக்கொள்'' என்றவாறு செல்வி கொடுத்த செயினை வாங்கி அணிந்துகொண்டு, தான் அணிந்திருந்த அட்டிகையை எடுத்துப் பெட்டிக்குள் வைத்தார்.
""சரி அடுத்தது, ஒட்டியாணம். அதில் நீ சண்டை போடமாட்டாய் என்று நினைக்கிறேன். ஒன்றே ஒன்று தான் உள்ளது. அது உனக்குத்தான்.'' என்று கூறிய வண்ணம் ஒட்டியாணத்தை எடுத்துக் காட்டினார் மலர்விழி.
""அதானே பார்த்தேன். எங்கே ஒன்றே ஒன்று உள்ளது என்று எனக்குக் கொடுக்காமல் இருப்பியோ என்று நினைத்தேன்'' என்று கூறிய வண்ணம் மலர்விழியின் கைகளிலிருந்து வாங்கி அந்த ஒட்டியாணத்தைத் தன் இடுப்பில் வைத்து அழகு பார்த்தாள் செல்வி.
அதற்குள் இன்னுமொரு பெரிய பெட்டியைத் திறந்தார் மலர்விழி. அப்பெட்டியில் வளையல்கள் பல வித அமைப்புகளில் இருந்தன. ""செல்வி, உனக்கு எவை வேண்டுமோ எடுத்துக்கொள்'' என்று அவர் நீட்டிய அந்தப் பெட்டியிலிருந்து ஏறக்குறைய முக்கால்வாசி வளையல்களைச் செல்வி எடுத்துத் தனக்கென வைத்துக்கொண்டாள்.
ஒவ்வொரு ஜதையாக எடுத்து செல்வி அவற்றை அணிந்து கொண்டு அழகு பார்க்கும் அந்தத் தருணத்தில், மலர்விழி மற்றுமொரு பெட்டியைத் திறந்தார்.
""செல்வி, இதோ பார். இந்தப் பெட்டியில் பலவிதமான தோடுகள், ஜிமிக்கி என உள்ளன. உனக்கு எவை பிடிக்கிறதோ அவற்றை எடுத்துக்கொள்'' என்ற மலர்விழியின் பேச்சைக் கேட்பதற்கு முன்பே, செல்வி அந்தப் பெட்டியைத் துழாவ ஆரம்பித்தாள்.
""ஐயோ, இவ்வளவு தோடுகளா? இதுவரை நான் பார்த்ததே கிடையாதே''
""செல்வி, இவற்றில் பல தோடுகள் என் தாயார் எனக்களித்தவை, மேலும் பல தோடுகள், உன் பாட்டி உனக்காக எடுத்து வைத்தவை. பிடித்திருந்தால் அத்தனையும் உனக்குத்தான்'' என்றவாறு அந்தப் பெட்டியை செல்வியின் பக்கம் தள்ளினார் மலர்விழி.
மற்ற எல்லா நகைகளையும் விட தோடுகள் செல்வியை மிகக் கவர்ந்தன. ஒவ்வொன்றாக தன் செவிகளில் வைத்துப் பார்த்தாள் செல்வி. பின் திடீரென ""அது சரி, இவையெல்லாம் எனக்குத்தான் என்றால் நீ வேறேதோ மிக அழகான ஒன்றை உனக்காக வைத்திருக்க வேண்டும். எங்கே உன் தோடைக்காட்டு'' என்று மலர்விழியின் பக்கம் நெருங்க, மலர்விழி, ""இல்லை செல்வி, எனக்குத் தேவையில்லை. எல்லாம் உனக்குத்தான்'' என்றார்.
""அது கிடக்கட்டும். நீ இப்போது என்ன வகையான தோடை அணிந்துள்ளாய் காட்டு"" என்று செல்வி மலர்விழியின் கூந்தலை ஒதுக்கி அவரின் காதைப் பார்க்க முயன்றாள்.
""அதற்குத் தேவையே இல்லை மலர்விழி. என் காதையே உனக்குத்தான் கொடுத்துவிட்டேனே. எனக்கு எதற்குத் தோடு?"" என்று காதுமடல்கள் அற்ற தன் செவித்துவாரங்களைச் செல்விக்குக் காட்டினார் மலர்விழி.
""அம்மா!'' என்று அதிர்ச்சியில் உறைந்தாள் செல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com