சொன்னால் நம்பமாட்டீர்கள்! - 9

இது நடந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக்கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள்.
சொன்னால் நம்பமாட்டீர்கள்! - 9

இது நடந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக்கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள். பலர் "ஜெயிலை உடை'யென்றும் "கட்டடத்திற்கு தீ வை' என்றும் பலவாறாகச் சத்தம் போட்டார்கள்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்து வந்தவர்களில் ஒருவரான எனது நண்பர் திருவேகம்பத்தூர் பாலபாரதி செல்லத்துரை அவர்கள் எல்லாரையும் அமைதிப்படுத்தி நான் இருந்த சிறைக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். அவர் சொற்படி அனைவரும் சப்-ஜெயிலுக்கு முன்னால் இருந்த மைதானத்தில் உட்கார்ந்தார்கள். பின்னர் செல்லத்துரை அவர்கள் என்னிடம் வந்து ""இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். ""நீங்கள் என்ன முடிவுடன் வந்திருக்கிறீர்கள்'' என்று நான் திருப்பிக் கேட்டேன். ""இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்'' என்று சொன்னார். ""சரி அப்படியே செய்யுங்கள்'' என்று நான் சொன்னதும், அங்கு நின்ற சிறை வார்டன் ஓடி வந்து ""இதோ சாவி இருக்கிறது'' என்று சாவியைக் கொடுத்தார். ""சாவி வேண்டியது இல்லை. உடைத்துதான் திறப்போம்'' என்று மக்கள் பெரும் முழக்கம் போட்டார்கள். அதன்படியே அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பாரை, முதலிய ஆயுதங்களால் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்துத் தகர்த்து கதவைத் திறந்தார்கள்.

பட்டப்பகல் 12 மணிக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள், சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஓர் அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை. அந்தச் சரித்திர சம்பவத்திற்கு நான் காரணமாக இருந்தேன் என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப்படுகிறேன், இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது.

மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில் நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடானை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கிவிட்டது.

தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச்சம்பவத்தின் பெருமையை உணரவில்லை. மதிப்பிற்குரிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் 1942 சிறையிலிருந்து தப்பியதே பெரிய வீரச்செயல் என்று நாடுபோற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் திருவாடானையில் மக்கள் திரண்டு சிறைச்சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைது செய்து வைத்திருந்த ஒரு சுதந்திர போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து கொள்ளவுமில்லை, பாராட்டவும் இல்லை.

விடுதலை செய்யப்பட்ட என்னைச் சுற்றி இருந்த மக்கள்,  என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். சிலபேர் நான் இருந்த சப்-ஜெயிலுக்குத் தீ வைத்தார்கள். வேறு சிலர் மாஜிஸ்ரேட் கோர்ட்டிற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் தீ வைத்தார்கள்.

அதன் பின்னர் போலீஸ் லைனை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அப்பொழுது நான் குறுக்கிட்டு ""அங்கு ஓடாதீர்கள். அவர்கள் அனைவரும் நமக்காக வேண்டிய ஒத்தாசை செய்திருக்கிறார்கள்'' என்று அவர்களிடம் சொன்னேன். சில பேர் போலீஸ்காரர்களை சும்மாவிடக் கூடாது என்றும் அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சத்தம் போட்டார்கள். நான் அவர்களைத் தடுத்து, ""அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள், நமது சுதந்திர போராட்டத்திற்கு உறுதுணையாக உள்ளவர்கள். அவர்களை ஒன்றும் செய்யவேண்டாம். இதோ அவர்களது உடைகள்'' என்று கூறி, போலீஸ்காரர்களுடைய உடைகள் அனைத்தையும் மக்களுக்குக் காண்பித்தேன். அவர்கள் அந்த உடைகளை வாங்கித் தீயில் போட்டுப் பொசுக்கித் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

பின்னர் கூட்டத்தினர் அனைவரும் என்னைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். அப்பொழுது என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலும், அதைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களும், கொழுந்து விட்டு எரிந்தன. அச் சமயம் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை ஒருவரும், துப்பாக்கிக் குண்டுகளை இன்னொருவரும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் துப்பாக்கிகளைக் கையில் ஏந்திக்கொண்டு சிப்பாய்களைப் போல் நடந்தனர்.

மக்கள் என்னை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே செல்லும்போது தூரத்தில் போலீஸ் லாரிகள் வருவது தெரிந்தது. போலீஸ் லாரியைப் பார்த்து மக்கள் கோபாவேசப்பட்டார்கள். பலர் போலீஸ் லாரியை அடித்து நொறுக்க வேண்டும் என்று கூச்சல் போட்டார்கள். சிலர் போலீஸ் லாரியை நோக்கி அரிவாளை வீசிக்கொண்டு ஓடினார்கள். எல்லோரையும் சமாதானப்படுத்தி ரோடுக்கு பக்கமாக இருந்த பனங்காட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி மக்கள் இரு கூறாகப் பிரிந்து ரோடின் இருமருங்கிலும் உள்ள பனங்காட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.

போலீஸ் லாரிகள் மெதுவாக ஊர்ந்து கொண்டு வந்தன. மக்கள் மறைந்திருப்பதை யூகித்தவர்கள் போல் போலீஸார் சுடுவதற்குத் தயார் நிலையில் லாரியில் நின்று கொண்டு இருந்தார்கள். ரோடு ஓரமாக மறைந்திருந்த ஒருவரை போலீஸார் பார்த்து விட்டனர். உடனே அவரை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுட்ட குண்டு மேற்படி நண்பரின் தொடையை தொட்டுக் கொண்டு சென்றுவிட்டது. உடனே மேற்படி நண்பர் பெரும் கூச்சல் போட்டு ""எல்லாம் வெத்து வேட்டு வெளியே வாங்கடா'' என்று கலவரப்படுத்தி விட்டார். மறைந்திருந்த மக்கள் அனைவரும் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டு வெளியே வந்து போலீஸாரைத் தாக்க ஓடினார்கள். இச்சமயம் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் ஒரு பக்கமும், குண்டு வைத்திருந்தவர்கள் மறு பக்கமும் பிரிந்து இருந்தார்கள். அதனால் மக்களிடம் இருந்த துப்பாக்கியினால் போலீஸாரைச் சுட இயலாமல் போய்விட்டது. குண்டுகளைக் கையில் வைத்திருந்த கிராமவாசிகள் மட்டும், மேற்படி குண்டுகளை எறிந்தால் வெடிக்குமா? வெடிக்காதா? என்று தெரியாததால் அவற்றைச் சரமாரியாக வீசிக்கொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில் போலீஸார் தங்களைக் காத்துக் கொள்ளச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். குண்டுகளை பொழிந்து தள்ளினர். என் இடது கையில் ஒரு குண்டு பாய்ந்தது. மக்களின் முன்னால் நின்ற என் மீது மேலும் குண்டுபடக்கூடாது என்று பல பேர் மாறி மாறி என் முன்னால் நின்று தங்கள் மார்பில் போலீஸாரின் குண்டுகளை ஏற்று வீர மரணம் எய்தினார்கள். இம்மாதிரி தியாகம் செய்த பெரு வரலாற்றை நான் படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்த மாபெரும் தியாகத்தை இன்று நினைத்தாலும் எனது மெய் சிலிர்த்துவிடுகிறது.

பல பேர் ஒரு தேசபக்தனைக் காப்பதற்கு உயிரைக் கொடுப்பது என்பது வீரகாவியமாகப் பாட வேண்டிய அத்தியாயமாகும். எவ்விதப் பிரதி பிரயோசனமும் கருதாமல் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகிகளுக்கு இந்த நாடு என்றும் தலைதாழ்த்தி வணங்கக்கடமைப்பட்டுள்ளது.

இப்படிப் பல பேரைச் சுட்டு வீழ்த்தி விட்டு போலீஸார் தப்பி ஓடிவிட்டார்கள். சிலர் இறந்து வீழ்ந்ததும் பலர் உடம்பிலிருந்து இரத்தம் தெறித்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு நிமிடத்தில் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் ஓடிவிட்டனர்.

நானும் எனது நண்பர் இராமநாதனும் பிணக் குவியலின் மத்தியில் நின்று கொண்டு இருந்தோம். உயிர் போன பலரும், உயிர் போகும் தறுவாயில் சிலரும், கை, கால், கண் போன சிலரும் ஒரே இரத்தக் காடாக முனகலும் மரணக் கூச்சலும், நிறைந்திருந்த அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்த 10 நிமிடத்துக்கு மேல் நின்று கொண்டு இருந்தேன். இரவு மணி 7 ஆயிற்று. வெளிச்சம் மங்கி இருள் பரவிற்று. பனங்காடு, சலசல என்ற சத்தம். மரத்தினுடன் மரங்கள் உராயும்போது ஏற்பட்ட பயங்கரமான "கீரிச், கீரிச்' என்ற ஒருவித அச்சமூட்டும் சத்தம். இந்நிலையில் நரியின் ஊளை வேறு, சுற்றிலும் இறந்து கிடந்த தேச பக்த தியாகிகளைப் பார்த்து ஒரு முறை அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு நகர்ந்தேன்.

இருட்டில் மேடு பள்ளம், முள், கல் இவைகளில் தட்டுத் தடுமாறி நடந்தோம். காலெல்லாம் கிழிசல் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே வந்தது. கையில் குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சுமார் நான்கு மைல் வந்ததும் தலை சுற்றியது. மயக்கமாக வந்தது. அதே இடத்தில் கீழே "தடால்' என்று மயக்கமாக விழுந்து படுத்து விட்டேன். என் நண்பரும் மயங்கிப் படுத்துவிட்டார். மயங்கிய நிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம்.

தூங்கிக் கொண்டிருந்த எங்களை சிலர் தட்டி எழுப்பினார்கள். சுமார் 10 பேர் நின்று கொண்டிருந்தார்கள். போலீஸார் என்று நினைத்து விட்டோம். ஆனால் அவர்கள் போலீஸார் அல்ல. அதற்கு முன் தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்திருக்கிறார்கள். அது சரி அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்தார்கள்? எதற்காக எங்களை எழுப்பினார்கள்?

சொன்னால் நம்பமாட்டீர்கள், நாங்கள் அவர்கள் உறவினரைப் புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் அவ்வளவு நேரம் அந்த இரவு முழுதும் படுத்திருக்கின்றோம். இதை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படி
இருந்திருக்கும்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com