முதியோர் இல்லம் அதிகமாக காரணம் ஆண்களா? பெண்களா? என்ற பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. ஆண்கள் தரப்பில் பேசிய அறிவழகன், " பெண்கள் மாமியார், மாமனாரைத் தங்களுடைய அப்பா, அம்மா போல நினைத்து நடத்தியிருந்தால்... முதியோர் இல்லங்களுக்குத் தேவையே வந்திருக்காது'' என்று அடித்துப் பேசினான்.
"ஆண்களைப் போலவே தங்களுடைய அப்பா, அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெண்களுக்கிருந்தால், முதியோர் இல்லத்துக்கு அவசியமே இல்லை'' என்று பெண்கள் தரப்பில் பேசிய கல்யாணி சொன்னாள். பட்டிமன்ற நடுவராக இருந்த வயதான சுப்பையா சொன்னார்: " பெற்ற பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி... பெண்ணாக இருந்தாலும் வயதானவர்களைக் கவனித்துக் கொண்டால் முதியோர் இல்லத்துக்குத் தேவையே இல்லை'' என்றார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இளம்பெண் ஒருத்தி சொன்னாள்: நீங்கள் எல்லாரும் இளையதலைமுறையையே குறை கூறுகிறீர்கள். எத்தனை மாமியார்கள் தங்கள் மருமகள்களை மகள் போல நடத்துகிறார்கள்?'' என்று கேட்டாள்.
பட்டிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அவளுடைய மாமியார் மரகதம், "வீட்டிற்கு வா உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்' என்று பொருமிக் கொண்டிருந்தாள்.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.