சொன்னால் நம்பமாட்டீர்கள்! 33

"என் நண்பர் ஒருவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் தாயாரைத் தொந்தரவு செய்து பணம், நகை முதலியவற்றை வாங்கிச் சென்று செலவழிப்பது வழக்கம்.
சொன்னால் நம்பமாட்டீர்கள்! 33

"என் நண்பர் ஒருவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் தாயாரைத் தொந்தரவு செய்து பணம், நகை முதலியவற்றை வாங்கிச் சென்று செலவழிப்பது வழக்கம். ஒரு சமயம் அவனுடைய தாய், பணமும் இல்லை, நகைகளும் இல்லை என்று சொல்லிவிட்டாள். உடனே அந்த சத்புத்திரனுக்குக் கோபம் வந்துவிட்டது. ருத்ரமூர்த்தியாகித் தாயின் தலைமயிரைப் பிடித்து இழுத்து வீதியில் போட்டு நாலு மொத்து மொத்திவிட்டு ஓடிவிட்டான்.
 காலையில் ஓடிப் போன பையன் வீட்டுக்கு வரவேயில்லை. சாப்பிடவும் இல்லை. அடிபட்ட தாயாருக்குத் தான் அடிபட்டது கூட மறந்து போய்விட்டது. " பையன் இன்னும் சாப்பிட வரவில்லையே?' என்ற கவலை வந்துவிட்டது.
 உடனே பக்கத்து வீட்டுக்காரரிடம் போய், "தம்பி நம்ம குப்புசாமி காலையில் சாப்பிடாமல், வெளியே போனவனை இன்னும் காணோம். நீங்கள் கொஞ்சம் பார்த்துக் கூட்டிக் கொண்டு வருகிறீர்களா? உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு'' என்று கெஞ்சினாளாம்.
 "அது யாரு குப்புசாமி? இன்று காலையில் உன்னைப் போட்டு அடித்தானே, அந்தச் சண்டாளப் பயலா? அவன் சாப்பிடவில்லை என்று கவலைப்படுகிறாயாக்கும். போ...போ...'' என்று பக்கத்து வீட்டுக்காரர் ரொம்பவும் கோபமாய்ப் பேசினார்.
 ஆனாலும் அந்த அம்மாள் விடாமல், "ஐயோ? அவன் ரொம்ப சின்னப் பிள்ளைங்க. தெரிஞ்சது அவ்வளவுதானுங்க. நீங்க கொஞ்சம் தயவு பண்ணி அவனைத் தேடிக் கூட்டியாங்க'' என்று காலில் விழுந்து கெஞ்சினாளாம்.
 தாயன்பு என்பது அப்படிப்பட்டது. தமிழ் மக்கள் அந்தத் தாயன்பைத்தான் பெரியாரிடம் காட்டுகிறார்கள்.
 தமிழ் மக்களை அவர் முட்டாள் என்றாலும், முண்டங்களே என்றாலும் தமிழ் காட்டுமிராண்டி மொழியென்றாலும், திருக்குறள் மட்டமான நூல் என்றாலும், கம்பனைக் கடிந்தாலும், முருகனை, ராமனை , சீதையைக் கேவலமாகப் பேசினாலும் தமிழ் மக்கள் பெரியாரிடம் அன்பு காட்டுகிறார்கள். இதுதான் தாயன்பு ஆகும்'' என்று கூறி, பெரியாரைக் கொஞ்சமும் தாட்சண்யம் பார்க்காமல் தாக்கிப் பேசினேன்.
 பெரியாரும் மகிழ்ச்சியாக என் பேச்சைக் கேட்டு ரசித்தார். நான் பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்படலானேன்.
 "இந்தாங்க இதைப் பெட்ரோலுக்கு வைத்துக் கொள்ளுங்கள்'' என்று 10 ரூபாய் கொடுத்தார். நான் மறுத்தும் கேளாமல் என் பையில் போட்டுவிட்டார்.
 சிலமாதங்கள் கழித்து, கும்பகோணத்திற்கு நானும் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தோம். எங்களுக்குக் கும்பகோணம் ஏஆர்.ஆர்.சீவல் கம்பெனி அதிபர் திரு.இராமசாமி அவர்கள் வீட்டில் மதிய உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது.
 நாங்கள் அங்கு சென்ற போது பெரியார் ஈவேரா அவர்களும் அங்கு வந்திருந்தார்கள். பெரியாருடன் ஒவ்வொருவராகப் போட்டோ எடுத்துக் கொண்டு அதற்காகப் பத்துரூபாய் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
 நானும் பெரியாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். எல்லாரையும் போலவே பத்து ரூபாயை நானும் பெரியாரிடம் கொடுத்தேன். " நீங்களுமா?'' என்றார் பெரியார்.
 "ஆமா... இந்த பத்துரூபாய் உங்களுடையதுதான். திரும்பி உங்களிடமே வருகிறது'' என்றேன். " ரொம்ப மகிழ்ச்சி''என்று சொல்லி பெரியார் சிரித்துக்கொண்டார்.
 கொதிக்கும் சோற்றுப்பானை
 வயசுக் கோளாறு காரணமாக என் நண்பர் ஒருவருக்கு ஒரு பெண் சிநேகிதமானாள். மிக நெருங்கிய நட்புக் கொண்டதனால் நண்பருக்குப் பணச் செலவும் அதிகமாயிற்று. இரண்டு மூன்று ஆண்டுகள் இந்நிலை தொடர்ந்து இருந்தது. செய்வது தவறு என்று என் நண்பருக்குத் தெரிந்தாலும் உறவை முறித்துக் கொள்ள முடியவில்லை.
 "பெண் மயக்கம்' ஏற்படும்போது யாருடைய உபதேசமும் செவியில் ஏறாது. எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் "பெண்' விஷயத்தில் இடறி விழுந்து விடுவது இயற்கை. சிலருடைய விவகாரம் வெளியில் தெரிந்து விடுகிறது. பலருடைய விவகாரம் தெரிவதில்லை. புராணத்தில், இதிகாசத்தில், சரித்திரத்தில், சமூகத்தில் இதற்கு எத்தனையோ சான்றுகள் கூறலாம்.
 நண்பருக்கு ஏற்பட்ட பெண் மயக்கம் தெளியப் பலவாறு முயன்றேன். "எப்படி இதிலிருந்து விடுபடுவது?'' என்று சிந்தித்துக் கொண்டே நண்பர் தன்னை அறியாமல் மீண்டும் "அங்கேயே' வட்டமிட்டார். இந்நிலையில் ஒருநாள் ஒரு நகைக்கடையிலிருந்து என் நண்பரின் காதலி டெலிபோனில் உடனே அங்கு வரும்படி நண்பரைக் கூப்பிட்டாள்.
 அவரும் அவசரமாகப் போனார். சுமார் 3000 ரூபாய்க்கு தங்க நகைகள் (காப்பு, சங்கிலி போன்றவை) எடுத்து வைத்திருந்தாள் காதலி. "என்ன விஷயம்?'' என்று நண்பர் கேட்டார்.
 அவளுக்குச் சொந்த ஊரில் ஒரு பெரியம்மா, பெரியம்மாவின் மகளுக்குக் கலியாணம். மணப்பெண்ணுக்குப் போட சில நகைகள் தேவை. இந்த நகைகளைக் காட்டி, அவர்களுக்குப் பிடித்தால் பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். நகையை எடுத்துப் போக நண்பர் கையெழுத்துப் போட்டால் கடைக்காரர் சம்மதிப்பார். இதுதான் விஷயம் என்று காதலி சொன்னாள்.
 "பூ ஒரு கையெழுத்துத்தானே' என்று நண்பர் மறு பேச்சு பேசாமல் கையெழுத்தைப் போட்டு விட்டு, நகையை வாங்கி அவளிடம் கொடுத்துவிட்டார். அன்று முழுவதும் காதலி வீட்டில் ஒரே குதூகலம். நண்பருக்குக் கோலாகலம்.
 அவள் சொன்னபடி தன் குடும்பத்தாருடன் பெரியம்மாவின் ஊருக்குப் புறப்பட்டுப் போனாள். அந்த ஊர் சென்னையிலிருந்து 400 மைல் தொலைவிலுள்ளது.
 ஒருவாரம் கழித்துத் திரும்பி வந்தாள். குடும்பத்தினருடன் வந்தது தெரிந்து நண்பர் ஆர்வத்துடன் காதலியைக் காணச் சென்றார். நண்பரைக் கண்டதும் அந்த காதலியின் குடும்பத்தினர் அனைவரும் விம்மலும் விக்கலும் விசும்பலுமாக அழுகையுடன், கொண்டுபோன நகை திருட்டுப் போய்விட்டது என்று பிரலாபித்தார்கள். நண்பருக்குச் சந்தேகம் தோன்றிவிட்டது.
 அவர் எதுவும் பேசவில்லை. இரண்டு மூன்று நாட்கள் எப்போதும் போல் அந்த வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தார். நகை அவர்கள் வீட்டில்தான் இருக்கிறது என்பதும் நண்பருக்கு நிச்சயமாயிற்று.
 இந்நிலையில் நகைக் கடைக்காரர் போலீசில் "கிரிமினல் கம்பிளைண்ட்' கொடுத்து விட்டார். நண்பர் அவர் அன்புக் காதலியிடமும் அவள் குடும்பத்தாரிடமும் நிலைமை மோசமாகப் போகும், நகையைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று எவ்வளவோ மன்றாடினார். அவர்கள் சாதித்து விட்டார்கள்.
 நண்பரிடம் அப்போது பணம் கைவசம் இல்லை. அதனால் நேராக என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். நான் நண்பரை போலீஸ் கமிஷனரிடம் கூட்டிச் சென்றேன். உண்மையைச் சொன்னேன். நகை நிச்சயமாக அவர்கள் வீட்டில் தான் இருக்கிறதா? என்று கமிஷனர் கேட்டார்.
 "ஆமாம்'' என்றோம் அழுத்தமாக.
 உடனே ஒரு போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு அந்தப் பெண்ணின் வீட்டைச் சோதனை போடும்படி உத்தரவிட்டார்.
 போலீஸ் அதிகாரி பெண்ணின் வீட்டிற்குப் போனதும் அவருக்கு ஏக உபசாரம் நடைபெற்றிருக்கிறது. வந்த விஷயத்தை அதிகாரி சொல்லியிருக்கிறார். "அதற்கென்ன நன்றாகப் பாருங்கள்'' என்று அங்குள்ள பெண்கள் அனைவரும் குழைந்திருக்கிறார்கள்.
 அதிகாரி வீட்டைச் சோதனை போட்டுவிட்டு "நகைகள் ஒன்றும் இல்லை'' என்று வந்துவிட்டார்.
 மேற்படி அதிகாரி உஷாரானவர்தான். எதற்கும் மசியக்கூடியவரல்ல. இருந்தும் அவர் ஏமாந்துவிட்டார் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.
 போலீஸ் கமிஷனரிடம் நான் வாதாடினேன். கமிஷனர் எங்களுக்காக மிகவும் பரிதாபப்பட்டார். இரண்டு நாள் தவணை கொடுங்கள். நான் கண்டுபிடித்துச் சொல்கிறேன்'' என்று அவரிடம் தவணை வாங்கிக் கொண்டு சென்றேன்.
 என் நண்பரின் காதலி வீட்டில் ஒரு சமையல் ஆள் உண்டு.
 அவளுக்கு நண்பர் நிறையச் செய்திருக்கிறார். அவள் மார்க்கெட்டுக்குப் போகும் நேரம் நண்பருக்குத் தெரியும். மார்க்கெட்டுக்கு அருகில் நானும் நண்பரும் காத்திருந்தோம். சமையல்காரி வந்தாள். அவளிடம் ரூ.100 கொடுத்தோம்.
 நைசாகப் பேசி அன்று அதிகாரி வந்தபோது நகையை எங்கே ஒளித்து வைத்திருந்தார்கள் என்ற விஷயத்தையும் தெரிந்து கொண்டோம். சமையல்காரியும் நாங்களும் சந்தித்ததை யாரிடமும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்து கொண்டோம்.
 மறுநாள் போலீஸ் கமிஷனரைச் சந்தித்தேன். தயவு செய்து இன்று மீண்டும் அந்த வீட்டைச் சோதனை செய்யும்படி உத்தரவிட வேண்டும் அதிகாரியுடன் நானும் செல்ல அனுமதி வேண்டும் என்றேன். கமிஷனர் அவர்கள் "அருள்' கூர்ந்து அப்படியே செய்தார்கள்.
 அதிகாரியும் நானும் மேற்படி பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். எங்கள் இருவருக்கும் பலத்த உபசாரம் நடந்தது. "அதிகாரி பல இடங்களில் தேடினார்'. நானும் கூடவே இருந்தேன். பெண்களும் ஆர்வத்துடன் பீரோ, மேஜை, பெட்டி எல்லாவற்றையும் திறந்து காட்டினார்கள்.
 ஓர் இடத்திலும் நகை இல்லை. அதிகாரி என்னைப் பார்த்தார். நான், "சரி சமையற் கட்டில் தேடலாம்'' என்று கூறிச் சட்டென்று சமையல் அறைக்குள் நுழைந்தேன். அங்குள்ள டப்பாக்கள், பெட்டிகள் எல்லாவற்றையும் அதிகாரி சோதனை செய்தார். ஒன்றும் கிடைக்கவில்லை.
 (தொடரும்)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com