(சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பழரசக் கடையின் பெயர்)
நயாகரா பழரசம்
த. லட்சுமி காந்த், சென்னை -61.
(திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் சென்ற ஒரு லாரியின் பின்புறத்தில்)
பார்க்கும் அனைவருக்கும் ஒரு புன்னகையைப் பரிசளி
ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
(எர்ணாகுளம் மாவட்டம் காலடி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
மஞ்சப் புறா
எம்.செல்லையா, சாத்தூர்.
(சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில்)
MY PET IS ON DUTY
மல்லிகா அன்பழகன், சென்னை-78.
(சிதம்பரம் கீழத் தெரு மாரியம்மன் கோயில் தெருவில் இரண்டு இளைஞர்கள்)
""கரோனாவால ஏற்பட்ட பாதிப்பு எப்ப நார்மலாகும்ன்னே தெரியலையே...''
""ஏன்டா மச்சி... ரொம்ப வருத்தப்படுறே? வேலைக்குப் போகாம வீட்ல இருக்குறது ரொம்ப
போர் அடிக்குதா?''
""அதெல்லாம் இல்லை. ஹோட்டல்ல புரோட்டா சாப்பிட்டு ரொம்பநாள் ஆச்சு... அதான்''
அ.ப.ஜெயபால், சிதம்பரம்.
(தஞ்சாவூர் - மரத்தடியில் நண்பரிடம் முடிவெட்டிக் கொண்டவரும் நண்பரும்)
""என்னடா... முடிவெட்டி
யிருக்கே... அங்கேங்கே வெடைச்சுக்கிட்டு அசிங்கமா நிக்குது...?''
""நான் என்ன முடி வெட்டுறவரா? ஏதோ... கரோனாவாலே உனக்கு கருணைக்காட்டி வெட்டிவிட்டா... ரொம்ப தான் சலிச்சுக்கிறே?''
"" அதுக்காக. கரோனா மாதிரியேவா?''
பா. து.பிரகாஷ், தஞ்சாவூர் -1
சில நாள் பேசாமலிருந்து பார்...
பல பேர் காணாமல் போய்விடுவர்.
சு.பொருநை பாலு, சென்னை-6.
மிகவும் ஆவலுடன் தனது அப்பா தில்லியிலிருந்து தனது பிறந்த நாளுக்காக வாங்கி அனுப்பி இருந்த பார்சலை தனது நண்பர்கள் மத்தியில் பிரித்தார் கேசவன். அவருடைய அப்பா அனுப்பி வைத்திருந்த அந்தப் பார்சலைப் பார்த்ததும் அவருக்குப் பிடிக்கவில்லை. நண்பர்களுக்குப் பிடித்திருந்தது.
கேசவனுக்கு வயது 65. அவருடைய அப்பாவுக்கு வயதோ 87. அப்பா அனுப்பியிருந்த பிறந்த நாள் பரிசு ஓர் அழகான கைத்தடி.
"தடி ஊன்றி நடந்துபோகும் அளவுக்கா நான் இருக்கிறேன்?' மனதுக்குள் சிறிது கோபம் ஏற்பட, சற்று நேரம் கழித்து, அந்தப் பரிசுடன் அப்பா அனுப்பியிருந்த குறிப்பை எடுத்துப் படித்துப் பார்த்தார் கேசவன்.
" மகனே... இந்தக் கைத்தடியை நீ பயன்படுத்தும் நாளில் நான் இருப்பேனோ... என்னவோ? ஆனால் நீ அதைப் பிடித்துக் கொண்டு நடக்கும்போது என் நினைவு உனக்கு இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பரிசு' கேசவனின் கண்களை நீர் மறைத்தது.
சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.
காலால் மிதித்தவனை கையால் எடுக்க வைக்கிறது...
முள்.
நெ.இராமன், சென்னை-74.
கரோனா தொற்று உள்ளவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் அவ்வாறு இருப்பதில்லை. எல்லாருடனும் கலந்துவிடுகின்றனர்.
அவர்களைக் கண்டுபிடிக்க பல்கேரியா நாடு ஒரு புதிய முறையைக் கையாள்கிறது. போலந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட கோமார்ட்ச் என்ற ஸ்மார்ட் வாட்ச்சை கரோனா தொற்று உள்ளவரின் கைகளில் மாட்டிவிடுகிறது.
வாட்சை அணிந்த அவர் எங்கே போனாலும் அந்த வாட்ச் காட்டிக் கொடுத்துவிடும். அவர் நடமாட்டத்தை ஜிபிஎஸ் மூலம் இந்த வாட்ச் கண்காணித்து பதிவு செய்கிறது. இந்த வாட்ச்சை அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பையும் இந்தக் கருவி கண்காணிக்கும் திறன் உடையது.
இந்த வாட்சைக் கழற்றினாலோ, எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்காமல் வேறிடம் சென்றாலோ தொடர்புடைய அதிகாரிகளுக்கு இந்த வாட்ச் தகவல் சொல்லிவிடும்.
என்.ஜே., சென்னை-58.