விஜய்யின் மகன் சஞ்சய், இப்போது தீவிரமாக நடிப்புப் பயிற்சியில் இறங்கிவிட்டார். இதற்கு அப்பா விஜய்யின் முழு ஆசீர்வாதமும் உண்டு. முதலில் நடனத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறார். அதற்காக வீட்டிற்கே வந்து பயிற்சி அளிக்கிறார்கள். அப்படி பயிற்சி அளிக்கும் நபரிடம் வெளியே இந்தச் செய்தியைக் கசிய விடக்கூடாது என்பதுதான் முதல் நிபந்தனையாம். இதனையடுத்து வசனங்களை உச்சரிக்கும் விதம் பற்றிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களாம். இன்னும் நான்கு ஆண்டுகளில் அவரைக் களமிறக்க ஏற்பாடு நடக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் "சொப்பன சுந்தரி'.
"லாக்கப்' படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் இயக்குகிறார். லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார். ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் உறியடி விஜயகுமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவுக்கு வந்துள்ளது.
"அயோத்தி' படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள். இவர்களோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் "வத்திக்குச்சி' திலீபன், "கைதி' ஜார்ஜ் மரியான், "வடசென்னை' பாவல் நவகீதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜும் பணியாற்றியுள்ளார்கள். பிரபல எழுத்தாளர் அழகிய பெரியவன், விஜய்குமார், தமிழ் மூவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.
"கோப்ரா' பிரமோஷனுக்காக வெளியில் வந்திருக்கிறார் விக்ரம். இப்போதைக்கு அவருக்குக் கண்டிப்பாக மூன்று மாத கால ஓய்வு தேவை என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை, பா.இரஞ்சித்திடம் சொல்லித் தள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார். எனவே இரஞ்சித், அந்த திரைக்கதையை இன்னும் செழிப்பாக்கப் போகிறார். இன்னொரு தகவல், விக்ரமிடம் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் சொல்லிவிட்டதால் வீட்டிற்குள்ளே சுற்றி வந்து நடைப்பயிற்சி செய்கிறார். உணவுப் பழக்கத்திலும் பல மாறுதல்களை கொண்டு வந்திருக்கிறார்.