சென்னை புறநகர் பகுதியில் கிழக்கு தாம்பரத்திலிருந்து மாடம்பாக்கம் வழியாக சென்றால் சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேங்கைவாசல் கிராமம். இங்கே ஒரு காலத்தில் எட்டு ஆலயங்கள் சிறப்பான வழிபாட்டில் இருந்து வந்தன. அவற்றுள் உடையார்கோயில் என்று அழைக்கப்பட்ட சிவன் ஆலயம் பல நூறு ஆண்டுகள் வழிபாடின்றி முற்றிலும் சிதிலமடைந்து இருந்தது. வெட்ட வெளியில் வெறும் சிவலிங்கமும், நந்தியும் மட்டுமே மிஞ்சியிருந்தன. இது சுமார் 600 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான ஆலயமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும்போது பால் நீல நிறமாவது சிறப்பு. அகத்தியர் இப்பகுதியில் விஜயம் செய்த போது வழிபட்டார் என்ற ஒரு செய்தியும் உண்டு. இந்த ஈசனை வழிபட்டால் தீராத கடனும் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயிலின் தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது.
தற்போது இவ்வாலயம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக அம்பாள், விநாயகப் பெருமான், பாலசுப்ரமணியர், கோஷ்ட மூர்த்திகள், நவகிரகங்கள் என ஒரு சிவாலயத்திற்கு உரிய அனைத்து சிலைகளும் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் ஆலயத்திற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 14ஆம் தேதி) காலை 10.15க்கு திருக்குடமுழுக்கு நடக்கிறது. பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் ஜுலை 13ஆம் தேதி தொடங்குகின்றன. இன்னும் நிறைவேற வேண்டிய பணிகளாக ஆலய திருக்குளம் சீர் அமைத்தலும்,மதில் சுவர் கட்டுதலும் உள்ளன.
தகவலுக்கு: 94442 00910
(பேருந்து தடம் எண் 51ஜி தாம்பரத்திலிருந்து வேங்கைவாசல் செல்கிறது).