விநாயகரின் வடிவங்கள் 32 என்பதை புராண வரலாறுகளின் மூலம் அறியலாம். அவற்றுள் "ஹேரம்ப கணபதி' என்கிற ஸ்ரீ பஞ்சமுக விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும்.
இவருடைய பத்து கைகளிலும், பாசம், தந்தம் முதலான ஆயுதங்களும், அட்சமாலை முதலிய பொருட்களும் விளங்குகின்றன. இவ்வாறு ஆயுதங்களையும், பழங்களையும், மாலை முதலான போகப் பொருள்களையும் தாங்கி இருப்பதால் வெற்றி வீரராகித் துன்பங்களைப் போக்குபவராகவும், இன்பங்களைக் கொடுப்பவராகவும் திகழ்கிறார்.
திருச்சி, பிச்சாண்டார்கோவில், இராஜகோபால்நகரில் அய்யன்வாய்க்கால் கரையில், ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 5 அடி உயரத்தில் சிம்ம வாகனத்தில் தாய் பராசக்தி மடியில் அமர்ந்து அருள்புரிகிறார் பஞ்சமுக விநாயகர்.
பஞ்சமுக விநாயகர் திருமுகங்கள் ஐந்தும், நான்கு திசைகளை நோக்கி உள்ளன. எனவே இவரை வழிபட, நான்கு திசைகளிலிருந்தும் நமக்கு வருகின்ற சங்கடங்கள் விலகும்.
ராகு, கேது தோஷம் உள்ளவர்களும், சனியினால் பாதிக்கப்பட்டவர்களும் ஹேரம்ப கணபதியை வழிபட தோஷங்கள் விலகும். திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இத்திருக்கோயிலில் பஞ்சமுக விநாயகருடன், பாலமுருகன், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி, துர்க்கை ஆகியோரும் அருள்புரிகின்றனர். இங்கு ஆலமரமும், அரச மரமும் இயற்கையிலேயே பின்னி வளர்ந்து வருவது சிறப்பு. இக்கோயிலில் வன்னி மரமும் அமைந்துள்ளது. வன்னிமர விநாயகரை வழிபடுவது சிறப்பு.
மாதந் தோறும் வளர்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி மற்றும் பெüர்ணமி தினங்களில் ஸ்ரீ பஞ்சமுக விநாயகருக்கும், கிருத்திகை அன்று ஸ்ரீபாலமுருகனுக்கும் மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆடி மற்றும் தை மாதங்களில் கடைசி வெள்ளிக் கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழா இரண்டு நாட்கள் விழாவாக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
தகவலுக்கு: 97503 93920