திருமாலைத் தம்முடைய மருமகனாகப் பெறும் பேறுபெற்றவர் பெரியாழ்வார்! கண்ணன் அவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பெரியாழ்வார், கண்ணனின் குழந்தைப் பருவ நிகழ்வுகளைத் தம்முடைய பாசுரங்களில் விவரிக்கும் சிறப்பு படிப்போரைக் கட்டுண்ணச் செய்யும்.
இது கோடை காலமாதலால் வெளியில் போகும்போது குடையும், செருப்பும் இல்லாமல் எவரும் செல்வதில்லை. அதேபோல் ஆயர்பாடியில் குடையும், செருப்பும் இல்லாமல் கண்ணனைக் கானகத்திற்கு அனுப்பியதை எண்ணித் துடிக்கும் யசோதையின் பரிதவிப்பை பெரியாழ்வார் தம்முடைய பாசுரத்தில் வெளிப்படுத்துகிறார்:
குடையும் செருப்பும் கொடாதே
தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று
வெம் பரற்கள் உடைக்
கடிய வெங்கானிடைக் கால்
அடிநோவக் கன்றின் பின்
கொடியென் என் பிள்ளையைப்
போக்கினேன் எல்லே பாவமே
என்பதில், "கூர்மையான கற்கள் நிறைந்து கிடக்கும் கானகத்திற்கு ஆநிரைகளை மேய்ப்பதற்கு காலில் செருப்பு அணியாமலும், கொடிய வெயிலுக்குப் பிடித்துக் கொள்ள குடையும் எடுத்துக் கொள்ளாமலும் என் மகன் போய்விட்டானே. என் மகனுக்கு குடையும், செருப்பும் கொடுத்தனுப்பாத பாவியாகி விட்டேன்'' என்று யசோதை கண்ணனை நினைத்துப் பரிதவிக்கின்றாள்.