கல்வியில் சிறந்த தொண்டை நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பெரிய வண்ணாங்குப்பம் கிராமத்தில் வயல் நடுவே பழைமையான சிவலிங்கத் திருமேனி காணப்பட்டது.
சதுர வடிவமான ஆவுடையார் அமைப்பைக் கொண்டு அத்திருமேனி தொன்மையானதாக உணரப்பட்டது. முன்பு கோயில் இருந்து அழிந்திருக்க வேண்டும். சிவலிங்கத் திருமேனி அருகில் அழகிய குளமும் வில்வ மரங்களும் அமைந்து இத்தலச் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றன.
இவ்வூரில் உள்ள இளைஞர் ஒருவருக்கு, இத்திருமேனிக்கு திருக்கோயில் எழுப்ப வேண்டும் என இறைவனது அருள் உணரப்பட்டதால் பன்னிரு திருமுறை நூலில் கயிறு சார்த்திப் பார்த்தனர். குருந்த மரத்தின் கீழ் இருந்து மாணிக்கவாசகருக்கு அருள் செய்த ஆத்மநாதரின் பெயர் வந்தது. எனவே, சிவலிங்கத் திருமேனிக்கு "ஆத்மநாதர்' என்று பெயர் சூட்டி, நாள்தோறும் வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார். அம்பாள் திருமேனியை ஸ்தாபித்து "யோகாம்பாள்' என அழைத்துப் போற்றுகின்றனர்.
தற்போது தகரம் வேய்ந்த கொட்டகையில் இறைவன், இறைவி எழுந்தருளி அருள்புரிகின்றார். இறைவனுக்கு எதிரே நந்தியம்பெருமானும் எழுந்தருளியுள்ளார். மேலும் ஆத்மநாதருக்கு திருக்கோயில் ஒன்றை எழுப்ப, ஆர்வம் கொண்டு முயற்சி செய்து வருகிறார். விநாயகர், முருகன், சண்டேசுவரர் சந்நிதிகளையும் அமைக்க முயற்சி செய்து வருகிறார். திருக்கோயில் பணிகள் முடிவடையாமல் உள்ளன. திருக்கோயிலை எழுப்ப முயற்சி செய்துவரும் நற்பணிகளுக்கு பக்தர்கள் உதவி செய்து ஆத்மநாதர் அருளைப் பெறலாம்.
பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை செல்லும் வழியில் தண்டலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆத்மநாதர் கோயிலுக்குச் செல்லலாம்.
தொடர்புக்கு: 94457 63263/ 82200 22476.
- ஜனார்த்தனன்