கண் கண்ட தெய்வமாக விளங்குபவர் சூரியபகவான். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பெயருடன் விளங்குபவர்! மேலும் ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு நிறம் என மாறுபவர்!
அதாவது, வசந்த காலத்தில் பொன்நிறத்துடனும் கோடைக்காலத்தில் சம்பக மலர் நிறத்திலும் மழைக்காலத்தில் வெண்மை நிறத்துடனும் முன்பனி காலத்தில் தாமிர நிறத்துடனும் பின்பனிக்காலத்தில் சிவப்பு நிறத்துடனும் ஒளிர்ந்து உலகத்திற்கு நன்மை புரிகிறார். இந்த வண்ணங்களை காலை சூரிய உதயத்தின்போது காணலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
இருள்மயமான அண்டத்தை பரப்பிரம்மம் பிளந்தபோது "ஓம்' என்ற ஒலி உண்டாயிற்று. அந்த ஒலியிலிருந்து மிகப் பிரகாசமாக சூரியன் தோன்றினான் என்கிறது மார்க்கண்டேய புராணம். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் வடிவமாக சூரியபகவான் விளங்குகிறார் என்று பாகவதம் கூறுகிறது.
சிவபெருமான், சூரியமண்டலத்தின் நடுவே ஒளிர்கிறார். சூரியன், சிவபெருமானின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராவார். சூரியனை சிவபெருமான், தமது வலது கண்ணாகப் பெற்றிருக்கிறார் என்று விவரிக்கின்றன சிவாகமங்கள். " நீ வெற்றியுடையவன், ஜோதியை ஆக்குபவன், எல்லாவற்றையும் காண்பவன், எவ்வுலகையும் ஒளிரச்செய்பவன், அனைவருக்கும் பொதுவானவன் என்கிறது யஜுர் வேதம். சூரியன் பசுவின் சாணத்திலுள்ள புழுக்களையும் ஒழிப்பவன். சரும நோய்களை குணப்படுத்துபவன். கண்களுக்கு பிரகாசத்தை வழங்குபவன் என்று கூறுகிறது அதர்வண வேதம்.
எனவே, பண்டைக்காலம் முதலே நம் முன்னோர்கள் சூரியனை தெய்வமாக வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே நாமும் சூரியனை தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறோம் என்றால் மிகையாகாது.
- டி.ஆர். பரிமளரங்கன்