கலைவாணியான சரஸ்வதி பிரம்மாவின் மனதிலிருந்து அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அந்த நாள் "வசந்த பஞ்சமி' திதியாகும். இந்த வருடம், வசந்த பஞ்சமி, 22.3.2018 அன்று வருகிறது.
பல கோயில்களில் சரஸ்வதிக்கு தனிச்சந்நிதி இருந்தாலும் தஞ்சை திருவையாறுக்கு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்தில் ஒரே சந்நிதியில் பிரம்ம தேவருடன் எழுந்தருளியுள்ளார்.
திருச்சிக்கு அருகில் உள்ள உத்தமர் கோயிலில் பிரம்மன் சந்நிதிக்கு அருகிலேயே சரஸ்வதி தேவி தனிச்சந்நிதி கொண்டு அருள்கிறார். கூத்தனூரில் சரஸ்வதிக்கு தனி கோயில் உள்ளது. இங்கு சரஸ்வதியின் கரங்களில் வீணை இல்லை. அதனால் இங்கு ஞான சரஸ்வதியாகப் போற்றப்படுகிறாள்.
பகவான் கிருஷ்ணர், முதன்முதலில் சரஸ்வதி தேவியைப் பூஜித்து பேறுபெற்ற நாள், "வசந்த பஞ்சமி' ஆகும். அதன் விளைவுதான் ராஜதந்திரத்திலும் அறிவாற்றலிலும் சிறந்து விளங்கினார். தனது வித்தைகளை மீண்டும் நினைவுக்கு வரும்படி வரம் பெற்றார். அந்த நாள் "மகா பஞ்சமி' என்னும் வசந்த பஞ்சமி ஆகும்.
பௌத்தர்கள் சரஸ்வதி தேவியை "வாக்தேவி' என்ற உருவில் வழிபடுகிறார்கள். ஜைனர்கள் "ருது தேவி' என்ற பெயரில் சிங்கம் அல்லது மயில் வாகனத்தில் அமர்ந்துள்ளதாகப் போற்றுகின்றனர்.
சரஸ்வதி ஜெயந்தியான வசந்த பஞ்சமியும் வித்யாரம்பத்திற்கு உகந்த நாள் ஆகும். மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதும் காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கவும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் அருகில் உள்ள சரஸ்வதி அருள்புரியும் கோயிலுக்கு முன்கூட்டியே சென்று வழிபடலாம். அல்லது வீட்டில் பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் படத்திற்கு மணமுள்ள மல்லிகை போன்ற மலர்களைச் சாத்தி வழிபட்டு பேறுகள் பெறலாம்.