வளம் தரும் வைகாசி மாதத்தை "மாதவ மாதம்' என்றும் வைகாசம் என்று போற்றுவர். வைகாசி முதல் தேதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. கங்கையில் நீராட வசதி இல்லாதவர்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள புனித நீர் நிலைகளில் வடக்கு நோக்கி கங்கையை பிரார்த்தித்து நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்று வேத நூல்கள் கூறுகின்றன.
வைகாசி என்பதை விசாகம் என்றும் சொல்வர். விசாகம் என்றால் " மலர்ச்சி' என்று பொருள். வைகாசிதான் சமஸ்கிருதத்தில் வைசாகம் ஆனது. இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹாவிஷ்ணுவை துளசி பத்ரங்களால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
வைகாசி மாதத்தில் பல அவதாரங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியது. ஆதிசக்தியானவள் அந்த ஆறு குழந்தைகளை அரவணைத்து ஓருடல் ஆக்கினாள் என்பது புராணம். அக்குழந்தையே ஆறுமுகனான முருகப்பெருமான். வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
கௌதம புத்தர் அவதரித்தது ஓர் வைகாசி பௌர்ணமி என்று வரலாறு சொல்கிறது. அவர், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமியே.
வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்த மாதம் வைகாசி. காஞ்சி மகாபெரியவர் அவதரித்ததும் வைகாசி பௌர்ணமியே. ஆதிசங்கரர் தோன்றியது வைகாசி பஞ்சமி.
வைகாசி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்ம ராகக் கற்களாலான மாலை அணிவித்து, எள்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம், "ரிஷப விரதம்' ஆகும். ரிஷப விரத நாளில் ரிஷப வாகனத்தில் உமாமகேஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் வாகனங்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வாகனம் வைத்திருப்போர் புதிய வாகனத்தை வாங்கும் யோகம் கிட்டும்.
வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. ஆகையால் எமதர்மராஜன் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வாஞ்சியம் மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
- டி.ஆர். பரிமளரங்கன்