சென்னை நகரிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் சென்னை- கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அழகிய சிறு நகரான புழல்! இவ்வூர் சோழர் காலத்தில் "ராஜ சுந்தரி நல்லூர்' என்று அழைக்கப்பட்டதாக மூலநாத சுவாமி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீர ராஜேந்திர சோழனின் மகனான கிழக்கு கங்க அரசன் ராஜேந்திரனின் மனைவி பெயரே, " ராஜ சுந்தரி' ஆகும். சோழர் காலத்தில் இவ்வூர் சிறப்புற்று விளங்கியது என கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
புழல் தலத்தில் தொன்மைச் சிறப்பு மிகுந்த ஆலயங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் சுமார் 600 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு திருவீதியம்மன் திருக்கோயிலாகும். தொன்மையும் பெருமையும் கொண்ட திருவீதியம்மன் மூன்றடி உயரத்தில் அமைதி தவழும் இனிய கனிவான திருமுகத்துடன் காட்சியளிக்கிறார். வேண்டியதை வேண்டியபடி அருளும் அன்னை மகாலட்சுமி சொரூபியானவள். இவ்வாலயத்தில் கருவறையில் திருவீதியம் மனுக்கு முன்பாக லிங்கத் திருமேனி அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
தற்போது, கருவறை, அர்த்த மண்டபம், கட்டப்பட்டு, கருங்கல் மேற்கூரையும் வேயப்பட்டுள்ளது. பஞ்சவர்ண வேலைகளும் நடைபெற்றுள்ளன. இவ்வாலயத்தின் மஹாகும்பாபிஷேகம் செய்ய தீர்மாணிக்கப்பட்டு, அருள்மிகு திருவீதி அம்மன், சிவலிங்கம், பரிவார மூர்த்தங்கள், பால விநாயகர், பால முருகன், பஞ்சமுக ஆஞ்சநேயர், சப்த கன்னியர்கள், நவக்கிரகங்கள், நாக தேவதைகள் ஆகிய மூர்த்தங்களுக்கு நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா, 14.12.2018 அன்று, காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 95001 70278.
- எம். ஜே. தினகரன்