விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சின்ன சேலம் ஒன்றியத்தில் உள்ளது கூகையூர் கிராமம். (சின்ன சேலத்திலிருந்து 12 கி.மீ). இவ்வூரின்கண் சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல கோயில்கள் அமைந்து, சிறப்புற்றிருந்ததை கல்வெட்டுக் குறிப்புகள் உணர்த்துகின்றன. அதில், சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள காரியாம்புரீசுவரர் கோயிலும் ஒன்று. இப்பகுதியை ஆண்டு வந்த மலையமான் திருமுடிக்காரி என்ற மன்னனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
அதனால் அவனது பெயரையும் சேர்த்து காரியாம்புரீஸ்வரர் கோயில் என அழைக்கப்பட்டது. இம்மன்னன் வெட்டிய குளம் அருகில் உள்ளது. சோழர்கள் கட்டடக்கலை அமைப்பு கற்றளியுடன் திகழும் இந்த ஆலயம் தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. அருமையான லிங்கத்திருமேனியுடன் கூடிய மூலவர் கருவறையிலேயே மேற்கூரையின்றி வானம் பார்த்த நிலையில் உள்ளதைக் காண மனதை சங்கடப்படுத்துகிறது. பின்னமடைந்த ஆறுமுகனார் சிலை ஆலயத்தின் வெளிச் சுற்றில் கிடத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர, வேறு எந்த விக்ரகத் திருமேனிகளும் கண்களுக்கு தென்படவில்லை. மொத்தத்தில் மிஞ்சியது மகாதேவன் மட்டுமே என்று ஆகிவிட்டது. ஆலயத்திற்கு உள்ளேயே பாம்பு புற்று இருக்கின்றது. சர்ப்பங்களின் நடமாட்டம் சகஜம். செடி கொடிகளின் வேர்கள் ஆலயச்சுவரில் ஆழமாக ஊடுருவி கட்டட அமைப்பைச் சற்று சாய்த்து விட்டது.
இதனை சீர்படுத்தும் விதமாகவும், ஆலயத்தைப் பாதுகாக்க திருப்பணி வேலைகள் துவங்க ஏதுவாகவும் சென்னையில் இயங்கி வரும் அண்ணாமலையார் அறப்பணிக் குழுவின் சார்பில் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் வரும் ஏப்ரல் 7 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று உழவாரப்பணி மேற்கொள்ளப்படுகிறது. சிவநேயச் செல்வர்கள் அவசியம் பங்கேற்க வேண்டிய உன்னதமான உழவாரப்பணி இது.
தொடர்புக்கு : 98840 80543 / 99411 45115.
- எஸ்.வெங்கட்ராமன்