* நல்ல நண்பர்களின் அடையாளங்களை நல்லவர்கள் பின்வருமாறு வர்ணிக்கிறார்கள்: பாவச் செயல்களிலிருந்து அவர்கள் விலக்குவார்கள், நல்ல செயல்களில் ஊக்குவிப்பார்கள், ரகசியங்களைக் காப்பார்கள், நல்ல குணங்களைப் பிரகடனம் செய்வார்கள், ஆபத்தில் கைவிட மாட்டார்கள், தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.
- பர்துருஹரியின் நீதி சதகம்
* சம்சார மாயை என்ற தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்வது எளிதல்ல. அதற்கு, "சம்சார மாயையிலிருந்து விடுபட வேண்டும்' என்ற விருப்பம் உள்ளத்தில் பொங்க வேண்டும். மேலும் கத்திமுனைமேல் நடப்பதுபோல் இடைவிடாத ஜாக்கிரதையுடன் புலன்களையும், மனதையும் மாசற நிறுத்தி வேற்றுமை உணர்ச்சியை அறவே நீக்க வேண்டும்.
- உபநிஷதம்
* முறையான இடத்தில், சரியான நேரத்தில் சிரத்தையோடு தகுதியுள்ளவனுக்கு முறைப்படி கொடுக்கப்படும் தானங்கள் அனைத்தும் தர்மத்தின் அடையாளமாகும்.
- யாக்ஞவல்க்ய ஸ்மிருதி
* இயற்கையை மீறுவது என்பது யாராலும் முடியாது. உலகில் பிராணிகள் தோன்றி முதுமையில் இறந்துவிடுகின்றன. இறந்ததை நினைத்து வருந்தலாமே தவிர, இறந்ததை திரும்பக்கொண்டு வர எவராலும் இயலாது. தன்னுடைய முறை வரும்போது மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்பவர் யாருமே இல்லை.
- ஸ்ரீ ராமபிரான்
* எவர்கள் தங்கள் நன்மையையும் துறந்து பிறர் நன்மைக்காக உழைக்கிறார்களோ, அவர்களே சத்புருஷர்கள். எவர்கள் தங்கள் நன்மைக்கு விரோதமில்லாமல் பிறர் நன்மைக்குப் பாடுபடுகிறார்களோ, அவர்கள் சாமானியர்கள். எவர்கள் தங்கள் லாபத்திற்காகப் பிறருடைய நலனைக் கெடுக்கிறார்களோ, அவர்கள் மனித வடிவத்தில் இருக்கும் அரக்கர்கள். எவர் ஒரு பயனில்லாமல் பிறர் நலனை அழிக்கிறார்களோ, அவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
- பர்துருஹரியின் நீதி சதகம்
* உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து எப்போதும் இறைவன் நாமத்தை ஜபம் செய்துகொண்டிருங்கள். உங்கள் காலத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் இறைவனின் நாமத்தை ஜபம் செய்வதால், ஆன்மிக உண்மைகள் அனைத்தையும் உணர்ந்துகொள்வீர்கள்.
- ஸ்ரீ சாரதாதேவியார்